கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மன்சூர் செயற்பட நீதிமன்றம் தடை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மன்சூர் செயற்பட நீதிமன்றம் தடை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றிய எம்.ரி.ஏ. நிஸாமினை கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டு, அவ்விடத்திற்கு கே.எல்.எம்.மன்சூர்; நியமிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை அடுத்து, மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்தை எதிர்த்து மாகாண மேல் நீதிமன்றத்தில் மன்சூரினால் வழக்கொன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கினை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், மாகாண கல்வி பணிப்பாளராக நிஸாம் செயற்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பானது  கடந்த ஜுன் 01ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனினால் வழங்கப்பட்டது.

மன்சூர் - தொடர்ந்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக செயற்பட இதன்போது மேல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆட்சேபித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றினை நிசாம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதியரசர்களான ஸிரான் குணரட்ன மற்றும் ருவான் பெர்ணான்டோ முன்னிலையில் கடந்த 14ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜராகியிருந்தார். இதற்கமைய கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ரி.ஏ. நிசாம், இன்று (17) வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.