தமிழரசு கட்சி செயலாளர் பதவியிலிருந்து துரைராஜசிங்கம் இராஜினாமா

தமிழரசு கட்சி செயலாளர் பதவியிலிருந்து துரைராஜசிங்கம் இராஜினாமா

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரான  கி.துரைராசசிங்கம் இராஜினாமாச் செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவும்இ சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"நான் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதுள்ளேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதோடு, நான் இப்பதவியை இன்றிலிருந்து துறக்கின்றேன் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.

எனவே, எனது இப்பதவி துறப்பை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறு தங்களை மிக அன்புடன் வேண்டுகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்படாது அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது தொடர்பில் துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையிலா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு மாவையின் ஆதரவாளர்கள் முயற்சி செய்திருந்த நிலையில் துரைராஜசிங்கம் தற்போது பதவி விலகியுள்ளது தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் மோதல்கள் அதிகரித்து வருவதை காட்டுகின்றது.