அத்துரலிய ரத்ன தேரர் நாளை எம்.பியாக சத்தியப்பிரமாணம்

அத்துரலிய ரத்ன தேரர் நாளை எம்.பியாக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் நாளை செவ்வாய்க்கிழமை (05) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் (அபே ஜனபல கட்சி) கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்ன தேரரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.

ஜாதிக ஹெல உறுமயவை பிரதிநிதித்துவப்படுத்தி 2004ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட ரத்ன தேரர், 2010ஆம் ஆண்டு ஏழாவது பாராளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு எட்டாவது பாராளுமன்றத்துக்கு இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நான்காவது தடவையாகப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யவுள்ளார்.

இதேவேளை, புத்தாண்டில் பாராளுமன்ற அமர்வுகளை நாளை (05) முதல் ஆரம்பிக்க சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்களும் முழுமையாக செயற்படுவதுடன், கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு  அமைய தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்களின் கீழ் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற பணியாளர்களில் எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இந்தப் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுநோய் உறுதிசெய்யப்படவில்லையென்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஜனவரி 08ஆம் திகதி வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

ஜனவரி 05 ஆம் திகதி கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படுவதுடன், ஜனவரி 06 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் திருத்த சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, ஜனவரி 07 ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்த) சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தஸநாயக்க குறிப்பிட்டார்