நாளைய ஹர்தாலுக்கு மு.கா, ம.கா ஆதரவு

நாளைய ஹர்தாலுக்கு மு.கா, ம.கா ஆதரவு

வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் நாளை (11) திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்தாலிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

யுத்தத்தினால் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் தூபியொன்று நிறுவப்பட்டிருந்தது. பல்கலைக்கழ உப வேந்தரின் உத்தரவிற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த தூபி உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் நாளை ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, "தூபி உடைப்பு மற்றும் முஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் போன்ற இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவமதிக்கும் அரசாங்கத்தின் வெளிப்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கைகளை கண்டித்து நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற உள்ள ஹர்தால் கடையடைப்புக்கு முஸ்லிம்களும் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாளை இடம்பெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம்.

இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும். முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம் கருதுகிறோம்.

எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது நாட்டில், இந்த அரசினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம்.

ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்" என்றார்.