ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் விமான நிலையத்தை திறக்குமாறு சிபாரிசு

ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் விமான நிலையத்தை திறக்குமாறு சிபாரிசு

தற்போது நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்மொழிந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியிலிருந்து இன்று வரை கொவிட் தொற்றுடைய எவரும் எழுமானமாக சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்துள்ள வெற்றியாகும் என்றும் செயலணியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் ஒழிப்பு செயலணியின் முக்கிய கூட்டமொன்று நேற்று (26) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மற்றும் கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட கொவிட் ஒழிப்பு செயலணியின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் செயற்பாடுகள் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

'முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் முன்னிற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. முன்னுரிமைகளை அறிந்து சுற்றுலா மற்றும் சுகாதார துறை நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என ஜனாதிபதி தெரிவித்தார்.

முதலாவது கட்டமாக - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள விருந்தினர் தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்களை உள்ளகப் பயன்பாட்டுக்காக திறப்பதற்கு அனுமதி வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு ஏற்ப - பின்னர், பதிவுசெய்யப்படாத நிறுவனங்களை இராணுவத்தின் உதவியுடனும், பொதுச் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் ஏனைய சிற்றுண்டிச் சாலைகளையும் திறப்பதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிக்கும் பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து - வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெற்ற சுற்றுலா பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.