கூரகலயில் அரச வெசாக் விழா – 2022

கூரகலயில் அரச வெசாக் விழா – 2022

அரச வெசாக் விழா – 2022 இனை பலங்கொட, கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த புதன்கிழமை (12)  நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழாவுடன், கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறு பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரத்தை வழங்கவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக இதனை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அரச வெசாக் விழாவினை வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும், கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கேற்ப பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கு கொண்டு அரச வெசாக் விழாவினை நடத்த முடியாது போனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கூரகல புண்ணிய தலம் அமைந்துள்ள பலங்கொட மற்றும் கல்தொட பிரதேசங்களை அண்மித்த பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய பிரதமர், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.