அவுஸ்திரேலியாவின் ஆதரவுடன் UNICEFஇனால் இலங்கைக்கு ஒட்சிசன் செறிவூட்டிகள் அன்பளிப்பு

அவுஸ்திரேலியாவின் ஆதரவுடன் UNICEFஇனால்  இலங்கைக்கு ஒட்சிசன் செறிவூட்டிகள் அன்பளிப்பு

இலங்கையின் தற்போதைய கொவிட் - 19 எதிர்கொள்ளும் செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் உடனடியாக தேவையாகவுள்ள ஒட்சிசன் செறிவூட்டிகள் மற்றும் ஏனைய முக்கிய கருவிகளை கொள்வனவு செய்து, சுகாதார அமைச்சிடம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) கையளித்தது.

மே 2021 ஆரம்பம் முதல் நாளாந்தம் சுமார் 2,000 நோய்த்தொற்றாளர்கள் என்ற அடிப்படையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் கொவிட் - 19 ஆரம்பித்தது முதல் கடுமையான சூழ்நிலை ஏற்படுவதனை தடுப்பதில் முக்கியமாக இருந்த நாட்டின் சுகாதார கட்டமைப்பினை தற்போதைய நிலைமை சிக்கலிற்கு உட்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் நிதியுதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த கருவிகள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய பிரதிநிதி எமா பிரிஹம், ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹோலியினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் கையளிக்கப்பட்டது.

இதில், 291 ஒட்சிசன் சிலின்டர்கள், 342 ஒட்சிசன் சீராக்கிகள், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான 2,490 முகக் கவசங்கள், மற்றும் 20 தீயணைப்பு கருவிகள் உள்ளடங்குவதுடன், மேல் மாகாணத்தின் 3ஆம் நிலை ஆதார வைத்தியசாலை, ஹோமகம, மற்றும் ஒட்சிசன் சிகிச்சை போன்ற அதியுயர் பராமரிப்பு வழங்கும் கொவிட்-19 நோயாளிகளை பராமரிக்கும் நிலை இரண்டுக்குரிய எட்டுக்கும் பகிரப்படவுள்ளன.

சிகிச்சை, கர்ப்பிணித் தாய்மார் மற்றும் புதிதாக பிறந்த சிசுக்களுக்கான பராமரிப்பு, உயர்சார்பு பிரிவு (HDU)  கருவிகள் உள்ளடங்கலாக உடனடித் தேவைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, கொவிட்-19 நிலைமைக்கான அரசாங்கத்தின் எதிர்கொள்ளலுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையாகவுள்ளது. இதுவரையில், இந்த நிதியில் சுமார் 20 வீதம் மாத்திரமே நிதியளிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எதிர்கொள்ளலுக்கான அவுஸ்திரேலியாவின் முழுமையான உதவி ரூ. 952 மில்லியனாக (6.2 மில்லியன் அவுஸ். டொலர்) உள்ளதுடன், சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தல், இலங்கைச் சமூகங்களில் சமூக ஒருமைப்பாட்டையும், ஸ்திரத்தன்மையையும் முன்னிறுத்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு உதவுதல் ஆகியவற்றை இலக்ககாக் கொண்டிருக்கின்றது.