கொழும்பை வந்தடைந்தது யுனிசெப்பின் 264,000 அஸ்ரஸெனெக்கா தடுப்பூசிகள்

கொழும்பை வந்தடைந்தது யுனிசெப்பின் 264,000 அஸ்ரஸெனெக்கா தடுப்பூசிகள்

கொரோனா வைரஸ் பரவலை இலங்கையில் கட்டுப்படுத்தும் நோக்கில் யுனிசெப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 264,000 அஸ்ரஸெனெக்கா தடுப்பூசிகள் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தது.

எமிரேட்ஸ் ஸ்கை கார்கோவின் ஊடாக கொண்டுவரப்பட்ட இந்த தடுப்பூசிகளை விமான நிலையத்தில் வைத்து யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி Emma Brigham, கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொவிட்-19 இனால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

கொவெக்ஸ் செயற்திட்டத்தின் கீழ் 1.44 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இதன் முதற் தொகுதியே இன்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய வரிசைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி திட்டத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை சனத்தொகையில் 20 சதவீதத்தினருக்கு யுனிசெப் தலைமையிலான கொவெக்ஸ் செயற்திட்டத்தினால் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் கொவெக்ஸ் செயற்திட்டம்  ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைப்பதற்கும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலின் அங்கீகாரத்திற்கும் உட்பட்டும் 1.44 மில்லியன் தடுப்பூசி அளவுகள் யுனிசெப்பினால் எதிர்வரும் மே மாதம் வரை கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.

கொவெக்ஸ் செயற்திட்ட விநியோக நடவடிக்கையானது, உலகம் முழுவதிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் 92 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய உலகளாவிய கொவிட்-19 தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

உலகின் மிகப்பெரிய ஒற்றை தடுப்பூசி வாங்குபவர் என்ற வகையில், யுனிசெப் தற்போது 2021ஆம் ஆண்டில் உலகளவில் இரண்டு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.