93% கொவிட் மரணங்கள் தொற்றா நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளன: ஜனாதிபதி

93% கொவிட் மரணங்கள் தொற்றா நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளன: ஜனாதிபதி

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏனைய நாடுகளைப் போன்றே, எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம்  ஏற்கெனவே தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்பதனை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணியுடனான இன்றைய (11) சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

இன்றைய கூட்டத்தின் போது கொவிட் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் எதிர்காலத்தில் எழக்கூடிய - கோவிட்டுடன்  தொடர்புடைய நோய்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய ஏனைய நடவடிக்கைகள் மற்றும் ஆராயப்பட வேண்டிய துறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

"இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக வேகமாக கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

பெரும்பாலானவர்கள், நோய் அறிகுறிகள் இன்றியே மரணத்தை தழுவியுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் போது, அவர்கள் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பாதுகாப்பதற்கும், கொவிட் நோய்த்தொற்றிலிருந்து அவர்கள் விலகியிருப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் உடனடியாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

"பிரதான வைத்தியசாலைகளுக்கு வருவதில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இனம்கண்டு - ஒரு காலத்தில் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேச மருந்தகங்களை உடனடியாக செயற்படுத்த வேண்டும்.

அதற்குத் தேவையான மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய பணிக்குழாமினரை உடனடியாக நியமிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படும் தரப்பினர் சரியாக நடைமுறைகளை பேணுகின்றனரா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அந்த பிரதேசங்களுக்கு உட்செல்வதற்கோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கோ எவருக்கும் இடமளிக்கக் கூடாது" என்றார்.