கல்முனை நகர் உள்ளிட்ட சில பகுதிகள் முடக்கம்: மேயர்

கல்முனை நகர் உள்ளிட்ட சில பகுதிகள் முடக்கம்: மேயர்

சர்ஜுன் லாபீர்

கல்முனை நகர் உள்ளிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகபிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் அறிவித்தார்.

இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (17) பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் மேலும் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக நாளை முதல் கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீட்டு வீதி (Rest House Road) வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் நாளை (17) வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (19) வரை முழுமையாக சன நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொதுமக்களை வீடுகளிலே தங்கி இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவ் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் இவ் நிலையினை நீடிப்பதா? இல்லையா? என முடிவு எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்ட கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கல்முனை மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம் தர்மசேன, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ ரிஸ்னி, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஸ்வரன், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச் சுஜித் பிரியந்த கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக்,செயலாளர் எஸ்.எல்.ஹமீட், கல்முனை சந்தை வர்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.