பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலம் கொழும்புக்கு மாற்றப்படாது: அமைச்சர் ரமேஷ்

பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலம் கொழும்புக்கு மாற்றப்படாது: அமைச்சர் ரமேஷ்

யாழ் நகரில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தை கொழும்புக்கு கொண்டுவர எவ்வித ஏற்பாடும் இல்லையென பெருந்தோட்டத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவிதத்தார்.

தேசிய வீடமைப்பு செயலகம்,  கண்டி வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலத்தை யாழ் நகரிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பரப்பப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்;ட விவாதத்தில் அண்மையில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனால் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மேலும் விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆடைத் தொழித்துறை ஊடாக கிடைக்கும் வருவாயை விட இவ்வருடம் அதிக வருவாய் பெருந்தோட்ட தொழில் துறையினால் கிடைத்துள்ளது. சவால் மிக்க சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டத்துறையை பாதுகாக்க உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் நான் செயற்படுகின்றேன்.

விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கமைய ஏனைய பெருந்தோட்ட பயிர்களை போன்று பனை தொழில்துறையினையும் பாதுகாக்கவும் அதனை கட்டியெழுப்பவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

பனை தொழிற்துறையின் நோக்கத்தை அடையவேண்டுமெனில் சம்பிரதாய உற்பத்திகளோடு நாம் பனை தொழிழ்துறையுடன் தொடர்புடைய புதிய உற்பத்திகளையும் முன்னெடுக்க வேண்டும்.

இதனூடாக ஏனைய தொழில்துறை போன்று பனை தொழில்துறைக்கும் எம்மால் புத்துயிர் அளிக்க முடியும். இந்த தயாரிப்புகளை நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் பாரியளவில் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனூடாக நாட்டுக்கு அதிகளவான அந்நியசெலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளோரை பாதுகாக்கும் நோக்கிலேயே நாம் இந்த சகல செயற்பாடுகனை முன்னெடுக்கின்றறோம். இதனூடாக அரசாங்கம் என்ற வகையில் எமக்கு எமது இலக்கை நோக்கி துரிதமாக செல்ல முடியும்" என்றார்.