சாராவை கைது செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை: முஜிபுர் ரஹ்மான்

சாராவை கைது செய்வதில் அரசாங்கம்  அக்கறை காட்டவில்லை: முஜிபுர் ரஹ்மான்

ஈஸ்டர் தற்கொலை குழுவின் உறுப்பினரான சாரா ஜஸ்மின் அல்லது புலஸ்தானி மகேந்திரனை கைது செய்வதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருடமும் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன்கொண்டு வரப்படுவார்கள் என்று அறிவித்தனர்.

இவ்வாறு கூறியே ஆட்சிக்கு வந்தனர்.நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் பலர் கைது செய்யப்படனர்.சஹாரனைப் பின்பற்றுபவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மீது அரசாங்கம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாரா ஜஸ்மின் அல்லது புலஸ்தானி மகேந்திரனை இப்போது காணவில்லை. சாராவை ஆரம்பத்திலிருந்தே கைது செய்வதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.

அவர் எங்கு இருக்கிறார் என்பதுதான் கேள்வி. இப்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சாரா உயிருடன் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் 251ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் போது சாரா உயிருடன் இருந்ததாக  ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியங்களில் ஆதாரங்கள்  உள்ளன.

இவ்வாறு இருக்கும் போது  சாரா இறந்துவிட்டாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார். அவர் உயிருடன் இருப்பதாக ஆணைக்குழு கூறுகிறது.

சஹ்ரானுக்கு மேல் இதை இயக்கிய பிரதான நபர்களை கைது செய்யுமாறு நாங்கள் கூறுகிறோம். அன்மைய காலங்களில் சமுத்திர அழிவு இடம் பெற்றது.'எக்ஸ்பிரஸ் பேர்ல்' என்ற கப்பலால் கடல் சூழல் அழிக்கப்பட்டதால் சமீபத்திய காலங்களில் கிட்டத்தட்ட 50 ஆமைகள் இறந்துள்ளன.

நாளாந்த மீன் பிடி துறைசார் தொழிலாளர்கள் ஜீவனோபாயத்தை முன்கொண்டு செல்ல முடியாத நிலையை அடைந்துள்ளனர்.மே 19 முதல் ஏழு நாட்களாக கப்பல் தீப்பிடித்து வந்ததை நாங்கள் அறிவோம். தீயணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

சேதம் குறித்து ஆராய ஒரு ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டது.தீயினால் ஏற்ப்பட்ட சேதங்கள் தொடர்பாக ஆராய குழுக்கள் நியமிக்கப்படவில்லை. சரியான தருனத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால் குழுக்களை நியமிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டிருக்காது" என்றார்.