ஹஜ் குழு சுயாதீனமாக இயங்குமா?

ஹஜ் குழு சுயாதீனமாக இயங்குமா?

றிப்தி அலி

ஹஜ் முகவர் சங்கங்களின் நிதியுதவியுடன் ஹஜ் குழுவிற்கான பிரத்தியோக அலுவலகமொன்று திறக்கப்பட்டமையானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.

வணக்க வழிபாடான ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய கடமைகள் இன்று வியாபாரமாக மாறியுள்ளமை யாவரும் அறிந்த உண்மையாகும். அத்துடன் பாரிய இலாபமீட்டும் தொழிலாகவும் இது மாறியுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகைகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கிலேயே ஹஜ் குழு சமய விவகார அமைச்சரினால் வருடா வருடம் நியமிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், ஹஜ் குழுவின் சுயாதீன செயற்பாடுகளில் பாரிய கேள்விக்குறி காணப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே ஹஜ் குழுவிற்கான பிரத்தியோக அலுவலகமொன்று முதற் தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை (21) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தல் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஹஜ் முகவர் சங்கங்களினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. முகவர்களுக்கு எதிராக யாத்திரிகர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீனமாகச் செயற்பட வேண்டிய ஹஜ் குழு, முகவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமையினால் எப்படி சுயாதீனமாகச் செயற்படும் என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரே இலங்கையில் ஹஜ் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு சட்ட ரீதியான எந்தவொரு அங்கீகாரமுமில்லை.

எனினும், சமய விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி இந்தக் குழு நியமிக்கப்படுகின்றது. எனினும், ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சிபாரிசுடன் இக்குழுவிற்கான உறுப்பினர்கள் கடந்த பல வருட காலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்தே செயற்பட வேண்டும். அத்துடன் இத்திணைக்களத்தின் பணிப்பாளருக்கே இக்குழுவின் தீர்மானங்களை அமுல்படுத்தும் அதிகாரமுள்ளது.

இதுவரை நியமிக்கப்பட்ட எந்தவொரு ஹஜ் குழுவும் வினைத்திறனாக செயற்படதாக அறிய முடியவில்லை. குறிப்பாக யாத்திரீகர்களின் நலன்களுக்காக செயற்படாமல், ஹஜ் முகவர்களுக்கு சார்பாகவே இக்குழு இதற்கு முன்னர் செயற்பட்டதை பல தடவைகள் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழு சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தலைராக இப்றாஹீம் அன்சார் நியமிக்கப்பட்டார்.

இலங்கை வெளிநாட்டு சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இவர், நீதி அமைச்சராக அலி சப்ரி செயற்பட்ட காலப் பகுதியில் போது அவரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்டார்.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸாக்களை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய ஒன்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசிற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் இவரது பணிப்பாளர் பதவி நிறைவுக்கு வந்தது. இவரை பணிப்பாளர் பதவியில் நீடிக்கச் செய்வதற்காக 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸாக்களை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக செயற்பட்டனர்.

எனினும், குறித்த பதவியில் நீடிப்பதற்காக அவர் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் தான், தனது  அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஹஜ் குழுவின் தலைவரான நிலையில் ஹஜ் குழுவிற்கான அலுவலகம் என்ற பெயரில் இப்றாஹீம் அன்சாருக்கான தனியான அலுவலகமொன்று உத்தியோகபூர்வமாக அமைச்சர் விதுர விக்கரமநாயக்கவினால் திணைக்கள கட்டடித்தில் திறக்கப்பட்டுள்ளது.

ஏலவே, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஹஜ் விவகாரங்களை கையாள்வதற்காக தனியான பிரிவொன்று உதவிப் பணிப்பாளரின் கீழ் செய்றபட்டு வருகின்றது.

இவ்வாறன நிலையில் தனியான அலுவலகமொன்று திறக்கப்பட்டமை ஏன் என்ற கேள்வி எழுகிறது.  குறித்த அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஹஜ் முகவர் சங்கங்களினால் வழங்கப்பட்டுள்ளன.  

இதனால், 2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழு வெளிப்படைத் தன்மையுடன் எவ்வாறு சுயாதீமாக செயற்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஹஜ் குழு நியமிக்கப்படுவதன் நோக்கம் முகவர்களிடமிருந்து யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்காகும்.

கடந்த காலங்களில் பல முகவர் நிறுவனங்கள் எவ்வாறு யாத்திரிகர்களை என்பதை நாம் அறிவோம். அப்படியானால், ஹஜ் குழு முகவர்களின் தயவுதாட்சனையில் இன்றி சுயாதீனமாக இயங்கினால் மாத்திரமே மக்களுக்கு நியாயத்தைப் கொள்ள முடியும்.

துரதிஷ்டவசமாக, ஹஜ் முகவர்களாலேயே அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள அலுவலகத்தினுள் இருந்து அவர்களுக்கு எதிராக ஹஜ் குழு எவ்வாறு தீர்மானங்களை எடுக்கப் போகிறது என்பது தான் இங்கு எழும் நியாயமான கேள்வியாகும்.

யாத்திரிகர்களின் நலனுக்காக நியமிக்கப்பட்ட ஹஜ் குழு, முகவர்களிடமிருந்து சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சிறிய அலுவலகமொன்றுக்கு இவ்வாறு பாரிய வரப்பிரசாதங்களைப் பெற்றவர்கள், எதிர்காலத்தில் பல வசதிகளைப் பெற்றுக்கொண்டு ஹஜ் கோட்டாக்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு பகிர்ந்தளிக்கமாட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இதனால், ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதிப்படுத்த வேண்டியது சமய விவகார அமைச்சரின் கடமையாகும்.