கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்களுக்கு நாகரிகமற்ற வகையில் வெளிப்படுத்தப்பட்ட நடத்தைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த விடயத்தில் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சங்கத்தின்     செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கேயினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடந்த திங்கட்கிழமை (17) அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தங்களது அண்மைக் கால நாகரிகமற்ற செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் எமது கிளைகளில் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன

இந்தத் தகவல்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு கிளைகளில் இருந்தும் தனிப்பட்ட நபர்களாலும் குறிப்பாக நிர்வாகத் தரத்திலுள்ள அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன.

உத்தியோகபூர் கூட்டங்களின் போது வைத்தியர்கள் தொடர்பில் தங்களினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களின் இந்த நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன் நாகரிகமற்றதுமாகும்.  

ஆளுநரின் இவ்வாறான நடத்தையானது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தர வைத்தியர்களிலும் திருப்தியற்றதும் விரும்பத்தகாததுமான சூழலை உருவாக்கியுள்ளது. இது சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை தீர்த்து வைக்க சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலையீட்டை கிழக்கு மாகாணக் கிளை வேண்டியுள்ளது.

தமது அங்கத்தவர்கள் மீதான ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமானால் தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக கிளைகள் எச்சரித்துள்ளதுடன், ஆளுநரால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களைப் பகிஷ்கரிப்பதில் இருந்து இது ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர், கிழக்கு மாகாண வைத்தியர்கள் மீதான  உங்களது நடத்தைகளை மீளாய்வு செய்யுமாறு தங்களை வேண்டிக் கொள்வதற்கு தமது நிறைவேற்றுக் குழு ஏகமனமாக முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பில் தாங்கள் எவ்வித சாதகமான முன்னெடுப்புக்களையும் எடுக்காவிட்டால் உங்களது எதிர்கால செயற்பாடுகளுக்கு எதிராக கிழக்கு மாகாணக் கிளை முன்னெடுக்கும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருப்போம்.

இந்த விடயத்தில் நீங்கள் உடனடியாக மேற்கொள்ளும் நடவடிக்கை, கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதார நிறுவங்களின் சேவையில் தடங்கல் ஏற்படுவதை தடுக்கும்" என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், இம்மாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் இந்த கடித்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.