நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும்: சட்டமா அதிபர்

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும்: சட்டமா அதிபர்

றிப்தி அலி

சர்ச்சைக்குரிய நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் மீளாய்வு செய்யப்படும் என சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்ணம் இன்று (18) புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரமே இந்த மீளாய்வு இடம்பெறவுள்ளது என சட்டமா அதிபர் சார்பாக மன்றில் ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல்  தெரிவித்தார்.

பொருத்தமான திருந்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம் பல்வேறு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், கடந்த 3ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்ப்பட்டது.

எனினும், குறித்த சட்டமூலத்தினை எதிர்த்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றினால் 35 விசேட நிர்ணய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்த்தன, ஏ.எல். சிரான் குணவர்த்தன மற்றும் அசலா வெங்கபுலி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே சர்ச்சைக்குரிய நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் மீளாய்வு செய்யப்படும் என்ற சட்டமா அதிபரின் அறிவிப்பு வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.