திரௌபதி அம்மன் ஆலயத்தில் நீண்ட காலமாகத் தொடரும் நிர்வாகப் பிரச்சினை

திரௌபதி அம்மன் ஆலயத்தில் நீண்ட காலமாகத் தொடரும் நிர்வாகப் பிரச்சினை

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு ஸ்ரீ - திரௌபதி அம்மன் ஆலயத்தின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாக நிலவி வருகின்றதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

"இதனால், குறித்த ஆலயத்தின் நிர்வாக சபையின் தெளிவான விபரங்கள் எதுவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் இல்லை" என இத்திணைக்களத்தின் தகவல் அதிகாரியும் பதில் நிர்வாக உத்தியோகத்தருமான தயாநிதி தயானந்தன் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்த ஆலயத்தின் இறுதி ஐந்து வருடங்களிற்கான நிதி அறிக்கைகள் எதுவும் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஸ்ரீ - திரௌபதி அம்மன் ஆலயம், 1987.11.02ஆம் திகதி HA/5/AM/07 எனும் பதிவிலகத்தின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாண்டிருப்பினைச் சேர்ந்த சமூக செயற்பட்டாளர் டி. டிலக்சினியினால் கடந்த நவம்பர் 11ஆம் திகதி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு கடந்த டிசம்பர் 5ஆம் திகதி வழங்கப்பட்ட பதிலேயே மேற்படி விடயங்கள் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.