காஸாவில் இனப்படுகொலை தொடர்பான விவரிப்புகள்

காஸாவில் இனப்படுகொலை தொடர்பான விவரிப்புகள்

நிது அர்தித்யா

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை ஆராய்வதில், சர்வதேச சாதனங்கள் மற்றும் நிறுவப்பட்ட நியதிகள் மூலமாக இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை ஆராய்வது அவசியமானது.

இந்த விரிவான ஆய்வானது சிக்கல்களை அவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், குறிப்பாக இந்த நியதிகள் நடந்துகொண்டிருக்கும் மோதலில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்கின்றது.

சர்வதேச மனிதாபிமான சட்டமானது (IHL), 1949 இன் ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் வழக்காற்று சர்வதேச சட்டம் ஆகியவற்றில் வேரூன்றி, ஆயுத மோதல்களின் தாக்கத்தை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் முக்கியமான கட்டமைப்பாக செயற்படுகிறது.

அதன் முதன்மை நோக்கங்களில் பொதுமக்கள், இனிமேல் செயற்திறனாக போரில் ஈடுபடாத தனிநபர்களைப் பாதுகாத்தல், ஆயுதம் மற்றும் போர் தந்திரங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். IHL இனுடைய ஏற்பாடுகள், தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்துவதுடன், கண்மூடித்தனமான தாக்குதல்கள், பொதுமக்களை இலக்கு வைப்பது மற்றும் கூட்டுத் தண்டனையை விதிப்பதைத் தடை செய்கிறது.

அக்டோபர் 7 முதல், காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைப்பிடிப்பது குறித்து தீவிரமான கரிசனங்களை உருவாக்கியுள்ளது.

அன்டோனியோ குட்டெரெஸ், போர் நிறுத்தத்திற்கான தனது வேண்டுகோளில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் IHL மீறப்பட்டதை தொடர்ந்து சுட்டிக் காட்டியுள்ளார்.

சமீபத்திய நிகழ்வுகள் ஜெனீவா ஒப்பந்தங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைகளின் வெளிச்சத்தில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சன ரீதியாக ஆராயத் தூண்டுகின்றன.

இஸ்ரேலிய - பலஸ்தீனிய மோதலில் இனப்படுகொலைக்கான நியதிகள்

இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குவதற்கான ஐ.நா. பிரகடனம், இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன, சாதிய அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடனான குறிப்பான செயல்களின் ஆணையமாக வகைப்படுத்துகிறது.

இந்தச் செயல்கள் குழு உறுப்பினர்களைக் கொல்லுதல், கடுமையான உடல் அல்லது உளத் தீங்கு விளைவித்தல், வேண்டுமென்றே குழுவின் பௌதீக அழிவுக்கு வழிவகுக்கும் நிலைமைகளை உருவாக்குதல், குழுவிற்குள் பிறப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை அமுலாக்குதல் மற்றும் குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.

ரஃபேல் லெம்கினின் எண்ணக்கரு ஒரு தேசிய, இன, சாதிய அல்லது மதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல்களை சுட்டிக் காட்டுகிறது. இந்த நியதிகளின் கீழ், பொதுமக்கள் மீதான நோக்கத்துடனான தாக்குதல்கள் மற்றும் பௌதீக அழிவுக்கு வழிவகுக்கும் நிபந்தனைகளை விதித்தல் போன்ற செயற்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். இந்த நியதிகளுக்கு எதிராக இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை மதிப்பிடுவது துல்லியமான மதிப்பீட்டிற்கு இன்றியமையாததாகிறது.

பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள்

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மையமானது போராளிகள் மற்றும் குடிமக்களுக்கு இடையில் தரப்பினர் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய வேறுபாட்டின் கொள்கையாகும்.

எவ்வாறாயினும், இந்த மோதல் பொதுமக்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களைக் கண்டுள்ளதுடன், இது அப்பட்டமான மீறலாகும். தகவலறிந்தவர்களின் கூற்றுப்படி, இஸ்ரேல் காசா பகுதியில் 12,000 இலக்குகள் மீது 25,000 தொன் வெடிபொருட்களை வீசியுள்ளதுடன், இது ஹமாஸைத் தாக்கும் இஸ்ரேலின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

நீடித்த முற்றுகை மற்றும் அடிக்கடி நடாத்தப்படும் தாக்குதல்கள் கணிசமான எண்ணிக்கையிலான பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பலியாகுவதை விளைவாக்கியுள்ளதுடன், சர்வதேச அமைப்புக்கள் விசாரணைகளைக் கோரத் தூண்டியுள்ளது.

அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய நடவடிக்கைகளால் 20,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதுடன், இது இந்த தாக்குதல்களின் பாரபட்சமான மற்றும் விகிதாசாரமான தன்மை பற்றிய கவலைகளை உருவாக்குகின்றது.

காசாவின் குடித்தொகை அதிகம் உள்ள பகுதிகளில், மனித இழையங்களில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் வெள்ளை பொஸ்பரஸ் என்ற பொருளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு குறிப்பிட்ட குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைக்கும் போது, அது இனப்படுகொலையின் ஒரு அங்கமாக இருக்கலாம்.

இஸ்ரேலிய குடிமக்களை வேண்டுமென்றே தாக்கியதற்காகவும், எச்சரிக்கையின்றி இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட்டுகளை வீசியதற்காகவும், மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதற்காகவும், பாலஸ்தீனிய தரப்பில் ஆயுதமேந்திய அமைப்புகள் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

மோதலின் உருவாக்கத்திற்கு பிறகு, இந்த நடவடிக்கைகள் சுமார் 1,400 இஸ்ரேலிய இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன், இது மீண்டும் IHL இன் அடிப்படை விதிகளை மீறுவதாகும்.

சிவிலியன் உயிர்கள் மீது பதிவாகியுள்ள எண்ணிக்கையானது சர்வதேச அமைப்புகளை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மீதான விசாரணைகளைக் கோரத் தூண்டுகிறது.

போர் குற்றங்கள் மற்றும் குறிப்பான சூழ்நிலைகள்

இனப்படுகொலைக்கு அப்பால், மோதல் போர்க்குற்றங்கள் மற்றும் IHL தொடர்பான கரிசனங்களை  எழுப்புகின்றது. இந்த சட்ட கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கு, பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்தல், பணயக் கைதிகள் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நிகழும் குறிப்பான சூழல்களைப் பற்றிய நுணுக்கமான புரிதல் தேவைப்படுகிறது.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கு சட்டரீதியான விளைவுகளை வெளிப்படுத்தல் இன்றியமையாததாகிறது. இஸ்ரேலிய கொள்கைகள் மீதான சரியான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சட்ட நியதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பான நோக்கத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்பதை வலியுறுத்துவது மிக முக்கியமானது.

தவறான பிரயோகமானது நாஜிகளின் இனஅழிப்பு போன்ற இனப்படுகொலைகளின் வரலாற்று முக்கியத்துவத்தை குறைத்து, இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் சிக்கல்களை மிகைப்படுத்தலாம்.

"கலாச்சார" இனப்படுகொலையின் கோரல்கள் பிரச்சாரத்தின் மற்றொரு அடுக்கைச் சேர்ப்பதுடன், இது சட்ட கட்டமைப்பிற்குள் நுணுக்கமான மதிப்பீட்டை அவசியமாக்குகிறது. சொல்லாட்சியை சட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுத்தி, பரந்த பொதுமைப்படுத்தல்களைத் தவிர்ப்பதில் கலாச்சார அழிவு தொடர்பான குறிப்பான நியதிகளைப் புரிந்துகொள்வது முக்கியமானது.

சர்வதேச சமூகத்தின் வகிபங்கு

இனப்படுகொலை உள்ளிட்ட அட்டூழியமான குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பை சர்வதேச சமூகம் கொண்டுள்ளது என்றும், அது இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஐ. நா. திறத்துவ நாடுகளும் முழு ஐ. நா. நிறுவனமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறுகிய காலப் பரிந்துரைகளில் இஸ்ரேலையும் ஹமாஸையும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்துதல், மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தல், பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவித்தல் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை விடுவித்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன.

நிபுணர்கள் குறிப்பாக மோதலால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மனிதாபிமான வழித்தடங்களைத் திறக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். நீண்ட கால நடவடிக்கைகளில் ஐ.நா மேற்பார்வையின் கீழ் சர்வதேச பாதுகாப்பு இருப்பை நிலைநிறுத்துதல், விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைப்பது, ஆயுதத் தடையை அமுல்படுத்துவது மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வது ஆகியவை அடங்குகின்றன.

அரசாங்கங்களை மட்டுமல்லாது, அரச சார்பற்ற நிறுவனங்களையும் உள்ளடக்கிய சர்வதேச சமூகமானது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் அபாயத்தைத் தடுக்கவும், இறுதியில் இஸ்ரேலிய நிறவெறி மற்றும் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் செயற்பட வேண்டும்.

இதன் விளைவுகள் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் தலைவிதிக்கு அப்பாற்பட்டவை என்று வல்லுநர்கள் வலியுறுத்துவதுடன், பிராந்திய மோதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கான துன்பங்களில் கடுமையான அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கின்றனர்.

இறுதியாக, இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் சட்ட இழைகளை அவிழ்ப்பதற்கு, சர்வதேச சாதனங்களின்  சூழலில் இனப்படுகொலை நியதிகள் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும்.

நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்புகள் மற்றும் நியதிகளைப் பிரயோகிப்பதன் மூலமாக, இச் செயற்பாட்டில் உள்ள சிக்கல்களைப் பற்றிய நுணுக்கமான புரிதலைப் பெறுவதுடன், தகவலறிந்த உரையாடல் மற்றும் பிராந்தியத்தில் சமாதானத்திற்கான விரிவான அணுகுமுறைகளுக்கான அடித்தளத்தை உருவாக்குவோம்.

நிது அர்தித்யா கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் இளங்கலைப் பட்டதாரி ஆவார், அவரை nithuardithya@gmail.com  எனும் மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்.