அன்பளிப்பு மருந்து பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்தார் இந்திய உயர் ஸ்தானிகர்

அன்பளிப்பு மருந்து பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்தார் இந்திய உயர் ஸ்தானிகர்

புனித வெசாக் வாரத்தில் இந்திய மக்களினதும், அரசினதும் பிரத்தியேகமான நட்பினை காண்பிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலமாக 12.5 தொன்கள் நிறையுடைய ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இன்று (08) வெள்ளிக்கிழமை

கொவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு கடந்த மார்ச் 15ஆம் திகதி நடைபெற்ற சார்க் தலைவர்களின் காணொளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த நோக்கினை உறுதிப்படுத்தும் வகையில் நான்காவது தடவையாக அனுப்பிவைக்கப்படும் இந்த மருந்துப் பொருட்களின் தொகுதி காணப்படுகிறது.

கடந்த மாதம்  மூன்று தொகுதி அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ கையுறைகள் இலங்கையிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே, ஒரே விமானத்தில் இந்த மருந்து தொகுதி கொழும்பை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர், இந்திய மக்களின் வெசாக் வாழ்த்துக்களை இலங்கை மக்களுக்கு பகிர்ந்துகொண்டார்.

"இந்து சமுத்திரம் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் நெருக்கமான இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான நட்புறவு, கூட்டொருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அதியுயர் முக்கியத்துவத்தினை  சுட்டிக்காட்டுவதாக தனக்கு வழங்கப்பட்ட பணி அமைவதாகவும்" அவர் தெரிவித்தார்.

கொவிட் 19 நோயின் தாக்கம் மற்றும் வினியோக மார்க்கங்களின் தொடர்ச்சியான ஸ்தம்பிதம் ஆகியவற்றின் காரணமாக உலகளவில் பல நாடுகள் மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருக்கும் நிலையில் நட்புநாடுகள் மற்றும் பங்காளிகளுடன் தனது வளங்களை பகிர்ந்து கொள்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாடானது  'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' (Vasudhaiva Kutumbakam) என்ற ஆணையின் மீதான இந்திய தலைமைத்துவத்தின் நம்பிக்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்தவாறு புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கடமைகளைப் பொறுப்பேற்கிறார்.