சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அதிகாரபூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்: ஜனாதிபதி

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அதிகாரபூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்: ஜனாதிபதி

குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அதிகாரபூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலை மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் போலியான செய்திகள் சமூக ஊடகங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அதேபோல, கொரோனா பரவல் தொடர்பாகவும் மிகைப்படுத்தப்பட்ட அச்சமூட்டும் செய்திகள், திட்டமிட்டு, பல்வேறுபட்ட உள்நோக்கங்களுடன் பரப்பப்படுகின்றன.

இத்தகைய செய்திகள் எவற்றையும் நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்வதுடன், நாட்டின் சுகாதார நிலவரம் தொடர்பான தெளிவை மக்களுக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற அதிகாரபூர்வ ஊடக அறிக்கைகள் - அச்சு ஊடகங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இலத்திரனியல் ஊடகங்களில் மட்டுமே வெளியிடப்படும் என்பதனையும் மக்களுக்கு அறியத்தர விரும்புகின்றேன்" என்றார்.