ஜனாதிபதி செயலணிக்கு காரைதீவு பிரதேச சபையில் கண்டனம்

ஜனாதிபதி செயலணிக்கு காரைதீவு பிரதேச சபையில் கண்டனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் கண்டன பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படாமை குறித்தும் இந்த கண்டனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச சபையின் 28ஆவது மாதாந்த அமர்வு, தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (11)கூடியபோதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் பிரேரணையைச் சமர்பித்துரையாற்றுகையில், "கிழக்கில் 248 ஏக்கர் காணியை, தொல்பொருள் என்ற ரீதியில் அபகரித்து, பௌத்த பூமியாக்க சதி நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

இறுதியில் இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில், ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டமைக்கு கிழக்கு மாகாண வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரால் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.