அமானா வங்கியின் தலைவராக அஸ்கி அக்பரலி நியமனம்

அமானா வங்கியின் தலைவராக அஸ்கி அக்பரலி நியமனம்

அமானா வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவராக அலி அஸ்கர் (அஸ்கி) அக்பரலி நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியின் ஸ்தாபக தலைவரான ஒஸ்மான் காசிம் தனது கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியொன்றில் பணிப்பாளர் சபையில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் ஆகக்கூடியது 9 வருடங்கள் வரை மாத்திரமே பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கலாம் என்ற இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த வழிகாட்டல்களின் பிரகாரம், இலங்கையில் இஸ்லாமிய வங்கியியல் துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டுள்ள ஒஸ்மான் காசிம், அமானா வங்கியில் பணிப்பாளர் சபையில் ஒன்பது வருட காலமாக பணியாற்றியிருந்ததைத் தொடர்ந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்கியிலிருந்து ஓய்வு பெற்றாலும் வங்கியின் முதல் 10 பங்குதாரர்களில் ஒருவராக அவர் தொடர்ந்து திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது. அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்திலிருந்து பிரேரிக்கப்பட்ட பணிப்பாளராக, அஸ்கி அக்பரலி அமானா வங்கியுடன் கடந்த ஜுலை மாதத்தில் இணைந்தார். வங்கியில் சட்டபூர்வ 9 வருடங்கள் பணிப்பாளராக கடமையாற்றி, ஒய்வு பெற்ற தயீப் அக்பரலியின் பொறுப்புகளை இவர் ஏற்றிருந்தார்.

உலகளாவிய ரீதியில் தேயிலை ஏற்றுமதிக்காகப் புகழ்பெற்றுள்ள, இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான அக்பர் பிரதர்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், அக்பர் குரூப் நிறுவனத்தின் உற்பத்தி, சொத்துக்கள் விருத்தி, ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல், சுகாதாரப் பராமரிப்பு, வலுப் பிறப்பாக்கல், பொதியிடல் மற்றும் அச்சிடல், சரக்குக் கையாளல் மற்றும் சூழல் சேவைகள் போன்ற பிரிவுகளில் இயங்கும் துணை நிறுவனங்களில் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் Renewgen (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளராக திகழ்வதுடன், Windforce (Pvt) Ltd, Hermitage Resorts (Pvt) Ltd, Uthurumaafaru Holding (Pvt) Ltd Maldives, Lhaviyani Holdings (Pvt) Ltd மற்றும் Cocoon Investments (Pvt) Ltd Maldives ஆகியவற்றின் தலைவராகவும் Alumex PLC இன் பணிப்பாளராகவும் அஸ்கி அக்பரலி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா அரச பல்கலைக்கழகத்திடமிருந்து தொழிற்துறைசார் பொறியியல் பிரிவில் BSc பட்டம் பெற்றதுடன், சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ முகாமையாளர்கள் கல்வியகத்தின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.

பழங்கால கார்கள் ரசிகராக அஸ்கி அக்பரலி திகழ்வதுடன், “Classic and Vintage Automobiles of Ceylon” எனும் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின் Classic Car Club இன் காப்பாளராகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது ஓய்வு அறிவிப்பு மற்றும் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் ஒஸ்மான் காசிம் கருத்துத் தெரிவிக்கையில்,

“அமானா வங்கி ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் தலைவராக செயலாற்றக் கிடைத்தமை உண்மையிலேயே மதிப்புக்குரிய விடயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வங்கி வளர்ச்சியடைந்து இன்றைய நிலையில் காணப்படுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

வங்கியில் பணிப்பாளர் சபையில் 9 வருடங்களைப் பூர்த்தி செய்து, என்னுடன் பணியிலிருந்து ஓய்வுபெறும் சக பணிப்பாளர்களான தயீப் அக்பரலி, ஹர்ஷ அமரசேகர மற்றும் ஜஸ்ரி மக்தொன் இஸ்மாயில் ஆகியோருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

வங்கி ஸ்தாபிக்கப்பட்டது முதல் வங்கியின் தூண்களாக இவர்கள் திகழ்ந்தனர். புதிய தலைவர் அஸ்கி அக்பரலியை வரவேற்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

தமது சொந்த வியாபாரத்தை உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தேயிலை நாமமாக தரமுயர்த்த இவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் அதனூடாக பெற்றுக் கொண்ட அனுபவம் போன்றன, வங்கியின் முன்நோக்கிய செயற்பாடுகளுக்கு பெரிதும் கைகொடுக்கும் என நான் நம்புகின்றேன்.

வங்கியின் வளர்ச்சிக்காக செயலாற்றும் ஏனைய அங்கத்தவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், நிர்வாகக் குழு மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக வழங்கும் பங்களிப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றிட்கு நான் நன்றி தெறிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அமானா வங்கியை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்” என்றார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில்,

“தூரநோக்குடைய சிந்தனை மற்றும் வழிகாட்டலுக்காக ஸ்தாபக தலைவர் ஒஸ்மான் காசிம் அவர்களுக்கு அமானா வங்கி பெரிதும் கடமைப்பட்டுள்ளது. அவரின் இடத்தை நிரப்புவது என்பது இலகுவான காரியமல்ல.

ஆனாலும், அவர் ஏற்படுத்தித் தந்துள்ள உறுதியான அடித்தளத்துக்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதுடன், வங்கியின் மூலோபாய இலக்குகளை எய்துவதுடன், எமது மனிதாபிமானத்தை முதன்மையாக கொண்ட வங்கிச் செயற்பாடுகளை சகல இலங்கையர்களுக்கும் பெற்றுக் கொடுக்கும் வகையில் பரந்தளவிலான வியாபார மாதிரியை அடிப்படையாகக் கொண்டு செயலாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் இயங்கும் அமானா வங்கி, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஜெத்தாவை மையமாகக்; கொண்டியங்கும் IsDB குரூப் வசம் 29.97 சதவீத பங்குகள் காணப்படுகின்றன.

IsDB குரூப் என்பது ‘AAA’ (S&P, Moody’s & Fitch) தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஜுன் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் லங்காவினால், அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தல் BB+(lka) எனும் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருப்பதில்லை. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது. ஓய்வு பெறும் பணிப்பாளர்களான ஒஸ்மான் காசிம், தயீப்; அக்பரலி, ஹர்ஷ அமரசேகர மற்றும் ஜஸ்ரி மக்தொன் இஸ்மாயில்; ஆகியோர் தொடர்ந்தும் ‘OrphanCare’ இன் காப்பாளர்களாக செயலாற்றுவார்கள்