பல்கலை மாணவர்களும், தொழிற் போராட்டமும்

 பல்கலை மாணவர்களும், தொழிற் போராட்டமும்

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதை போன்று அதே வருடம் படித்து பட்டம் பெற்று மாணவர்கள் வெளியேறுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மறு புறம், முன்னைய வருடங்களைச் சேர்ந்த அதாவது பழைய வருட பட்டதாரி மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலைமைகளையும் நாம் காண்கிறோம்.

எவ்வளவுதான் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். பல வருடங்களாகத் தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களை தேர்தல் காலங்களில் மாத்திரம் கருத்தில் கொள்ளாது ஏனைய காலங்களிலும் பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் முயற்சி பற்றி நம் அரசு கவனம் எடுப்பது நன்று.

பல்கலைக்கழகத்துக்கு வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகாத ஏனைய மாணவர்கள் அவர்களுடைய வெட்டுப்புள்ளிகள் பற்றிய எந்தவித கவனமும் இன்றி வெளிவாறி நிறுவனங்களுடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களின் பட்டங்களுக்கு சரிக்கு சமமாக பட்டத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.

இதன்போது போட்டிப் பரீட்சைகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தட்டிப்பட வெளிவாரிப் பட்டதாரிகள் தொழிலை பெறுகிறார்கள். பல்கலைக்கழகத்தில் 3 அல்லது 4 ஆண்டு காலம் கல்வி கற்றவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இன்றி சரி சமனாக பட்டங்கள் வழங்கப்பட்டு தொழில் வழங்கப்படுகிறது.

இவர்களை வெளிவாரி பட்டதாரியாக தெரிவு செய்து தொழில் வழங்க முடியுமாக இருந்தால் ஏன் அவர்களை உள்வாரிப் பட்டதாரிகளாக தெரிவு செய்ய முடியவில்லை. உள்வாரி பட்டதாரிகள் பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் நிராகரிக்கப்பட பிரதான காரணமாக இதுவும் காணப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களில் மருத்துவத் துறையினருக்கும் பொறியியல் துறையினருக்கும் பெரும்பாலும் தொழில் பிரச்சினைகள் வருவதில்லை கலைப் பிரிவு மாணவர்களே அதிகமாக இந்த பிரச்சினைகளுக்கு உட்படுகிறார்கள்.

இதற்குப் பிரதான காரணம் கலைப் பிரிவில் அதிகமான மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதும் அவர்களுடைய பாடங்கள் குறிப்பிட்டு எல்லைக்குட்பட்டதாகக் காணப்படுவதும் ஆகும். எனவே மாணவர்கள் கலைத் துறையை தெரிவு செய்வதைப் போல ஏனைய துறைகளையும் தெரிவு செய்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பல்கலைக்கழகங்கள் குறித்த துறை மாணவர்கள் பொருத்தமான பாடங்களைக் கற்பிக்கும் அதே வேளை தொழில் பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்குவது சிறந்தது.

ஆரம்ப காலத்திலிருந்து இருந்த படிக்காத பாமர மக்கள் பேணிய ஆரோக்கியத்தை இக்காலத்தில் உள்ள நம்மால் பேண முடியாதுள்ளது காரணம் இன்றைய சூழல். எனவே ஒரு மனிதனுடைய வாழ்வுக் காலம் இவ்வளவுதான் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தொழிலிலிருந்து ஓய்வுபெறுவதற்குரிய வயதெல்லையை அரசு மேலும் நீடிக்காது.

அதை குறைத்து எதிர்கால பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதனூடாக இந்த பிரச்சினையை சிறிது குறைக்கலாம் என நினைக்கிறேன். மேலும் ஆண்டு இறுதியில் படித்து வெளியேறும் பட்டதாரிகளை வருடக்கணக்காக தேக்கி வைக்காதது ஒன்று அல்லது இரண்டு மாத இடைவெளியில் அவர்களுக்கான தொழில்களை வழங்குவதன் ஊடாக எதிர்காலத்தில் படித்து வெளியேறும் பட்டதாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் சிரமம் இல்லாமல் இருக்கும்.

இவ்வாறான நிலைமைகள் காணப்படாமையினால் இன்றைய பட்டதாரிகளின் நிலைமைகள் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் க.பொ.த (சாதாரண தரம்), க.பொ.த (உயர்தரம்) மற்றும் பல்கலைக்கழகத்திலும்  மூன்று அல்லது நான்கு வருடங்கள் கடந்து கஷ்டப்பட்டு கரையேறி பட்டதாரி எனும் தகுதியை கையில் எடுத்த ஒரு நபரும் க.பொ.த (சாதாரணதர பரீட்சையில்) சிறந்த முறையில் சித்தி அடையாமல் உயர்தரத்துக்கு தெரிவாகாது இடை நிறுத்தப்பட்ட ஒரு நபரும் சமம்.

காரணம் இருவருமே தனக்கு கிடைத்த வேலையை வைத்து வாழ்கிறார்கள் அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேளை அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்னும் அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் பட்டதாரிகளும் இன்று நம்மில் உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

தொடரும் காலத்திலும் பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் போராட்டங்கள் தொடராமல் இருப்பதை கவனத்திற் கொண்டு அவர்களின் மனநிலை, தற்கொலை முயற்சிகள், வாழ்வியல் ஒழுக்கங்கள், குடும்பநிலை, பொருளாதாரம் என்பவற்றையும் கருத்திற்கொண்டு பட்டதாரிகளின் தொழிற் போராட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.

ஏ.எல்.எப். நுஸ்கியா
தென் கிழக்கு பல்கலைக்கழகம்
'வழித்தடம்' - All University Muslim Student Association