கல்முனை கடற்கரை பள்ளிவாசல் 200ஆவது கொடியேற்ற விழா நினைவு முத்திரை வெளியீடு

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் 200ஆவது கொடியேற்ற விழா நினைவு முத்திரை வெளியீடு

நூருல் ஹுதா உமர்,  எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜூன் லாபீர், ஏ.எல்.எம். ஷினாஸ்

நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக இடம்பெறும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200  வது கொடியேற்ற விழாவை சிறப்பிக்குமுகமாக 25 ரூபாய் பெறுமதியான முத்திரை ஒன்று  பள்ளிவாசல் முன்றலில் இன்று (06) மாலை வெளியிடப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுடன் இணைந்து மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், பிரதித் தபால்மா அதிபர் ரஞ்ஜித் கே.ரணசிங்க,  கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் ஜெயநந்தி திருச்செல்வம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

இந்த முத்திரை வெளியீட்டுக்கான முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை கல்முனை தொகுதி சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.