மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 60 சதவீதமானவர்களுக்கும் கம்பஹா மாவட்டத்தில் 47 சதவீதமானவர்களுக்கும், களுத்துறை மாவட்டத்தில் 34 சதவீதமானவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொள்வனவுக்கான கட்டளைகள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும், முறையான ஒரு திட்டத்தின் கீழ் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அதிகளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து, கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி  இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

இரண்டாம் டோஸூக்குத் தேவையான அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார். அந்த வகையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவருக்கும், அதன் இரண்டாவது டோஸை முறையாக வழங்குவதற்குத் திட்டமிடுமாறும், ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு, 45 வாரங்களுக்குள் அதன் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்ள முடியுமென, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளதாக, கொவிட் ஒழிப்பு விசேட குழுவின் உறுப்பினர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

கடந்த திங்கள் முதல், வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகக் குறுகிய காலத்தில் அதிகளவானவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க முடிந்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த முறைமையைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க. சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க ஆகியோரும் கடற்படை, விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு