ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் குறைகேள் அதிகாரி நியமனம்

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் குறைகேள் அதிகாரி நியமனம்

ஜனாதிபதி செயலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் குறைகேள் பணியகத்தின் குறைகேள் பொறுப்பதிகாரியாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு எஸ். எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமக்குரிய நிர்வாகப் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் தமது பொறுப்பிலிருந்து விலகியிருந்தால் அல்லது தமது அதிகார வரம்புகளைத் தாண்டி செயற்பட்டிருந்தால், அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் - அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதே குறைகேள் பணியகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.

அது மாத்திரமல்லாமல், தமது இயல்பு வாழ்க்கையை மக்கள் அமைதியாகப் பேணுவதற்குத் தடையாக உள்ள - போதைப்பொருள் கடத்தல், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பான விடயங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை இந்த பணியகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டத்தது.

கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இந்த பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமது முறைப்பாடுகள் அல்லது மனக் குறைகளை - மேற்படி பணியகத்திற்கு நேரிலே வருகை தந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறில்லாவிடின், ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரி, ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்ற முகவரிக்குத் தபால் மூலமும் தமது முறைப்பாடுகளையும் மனக் குறைகளையும் பொதுமக்கள் முன்வைக்க முடியும்.

அது மாத்திரமல்லாமல் 011-2338073 என்ற தொலைபேசிஃதொலைநகல் இலக்கம் மற்றும் ombudsman@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.