9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் புதன்கிழமை ஆரம்பம்

9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் புதன்கிழமை ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நேற்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற இணைப்புக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

விசேடமாக 2022 ஜனவரி 18ஆம் திகதி முதல் ஜூலை 28ஆம் திகதி வரை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் காணப்பட்டதுடன், இக்காலப் பகுதியில் பாராளுமன்றம் 48 நாட்கள் கூடியுள்ளது.