தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு ஐந்து புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரான கிங்ஷ்லி ரத்னாயக்க தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக சட்டத்தரணி ஜகத் லியனராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வல்கம ஆகியோர் முன்னைய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சட்டத்தரணி ஜகத் லியனராச்சி – தகவல் அறியும் உரிமை தொடர்பில் பல்வேறு செயலமர்வுகளையும் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆணைக்குழுவிற்கு 22 பேர் சிபாரிசு செய்யப்பட்டிருந்தனர். அதில் ஐந்து பேரை பாராளுமன்ற பேரவை ஜனாதிபதியின் நியமனத்திற்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.