வெள்ளவத்தை கோடீஸவரர் வீட்டு சிறைப்பிடிப்பு; வாழைச்சேனையை சேர்ந்த இருவர் கைது

வெள்ளவத்தை கோடீஸவரர் வீட்டு சிறைப்பிடிப்பு; வாழைச்சேனையை சேர்ந்த இருவர் கைது

எம்.எப்.எம்.பஸீர்

இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இருவர், வெள்ளவத்தை – ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை கேட்டபோது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை சிறை பிடித்து, தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வாழைச்சேனையை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் டி சில்வாவின் கீழ் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேக நபர்கள் வீட்டு உரிமையாளர் உள்ளிட்டோரை சிறைப்படுத்தி வைக்க பயன்படுத்திய கை விலங்கு, வயர்கள் உள்ளிட்டவற்றை மீட்டுள்ள பொலிஸார் அது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கை விலங்கானது இராணுவ கோப்ரல் ஒருவரிடமிருந்து தமக்கு கிடைத்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளபோதும் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.