பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு ஆதரவில்லை: தௌபீக் எம்.பி

பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு  ஆதரவில்லை: தௌபீக் எம்.பி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கமாட்டேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

"20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தொடர்ந்தும் பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்களா?" எனக் கேட்டு சமூக செயற்பட்டாளர் ஒருவர் பேஸ்புகில் பதிவொன்றினை மேற்கொண்டிருந்தார்.  

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பதில் வழங்கிய போதே, "தான் அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பின்னர் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு இவர் ஆதரவு வழங்கி வந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பினை மேற்கொண்ட இவர், நேற்று (06) புதன்கிழமை இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அரச தரப்பு பாராளுமன்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.