புலஸ்தினிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரிக்கு பிணை

புலஸ்தினிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரிக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் ஸாரா ஜஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் நேற்று (20) திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி, புலஸ்தினி மகேந்திரனைப் பற்றிய தகவலைத் தெரிந்தும் அதனை வெளிப்படுத்தாதமைக்காகவும். அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 13.07.2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் தடுப்புக்காவில் வைக்கப்பட்டு 08.04.2021இல் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

தான் செய்யாத குற்றத்திற்க்காக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றமையானது தனது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகக் கூறி பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர், 2021 ஜூன் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றில் தனது சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய  ஏ. எல். ஆஸாதினூடாக அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 32 மாதங்களாக தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதபதி அப்துல்லாஹ்வினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது அரச சார்பில் மன்றில் தோன்றிய அரச சட்டத்தரணி, குறிப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்படுவதற்கு எதிராக தனது கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் சார்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டத்தரணிகளான ஏ.எல்.ஆஸாத், சலாஹுதீன் சப்ரின் மற்றும் பாத்திமா பஸீலா ஆகியோர் செய்த சமர்ப்பணங்களைச் செவியேற்ற நீதிபதி, பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கரை  பிணையில் விடுதலை செய்தார்.