சவூதியினால் இலவச கண் சிகிச்சை முகாம்

சவூதியினால் இலவச கண் சிகிச்சை முகாம்

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தினால் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்கள் இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன.  

செப்டெம்பர் 07 முதல் 16 வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு நகரங்களில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்த தன்னார்வத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல், தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கல்  போன்றன இடம்பெறும்.

மேலும், இத்திட்டத்தினூடாக சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் சுகாதார விழிப்புணர்வும் வழங்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் கஷ்டங்களைப் போக்க சவூதி அரேபியா மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலேயே இந்த இலவச கண் சிகிச்சை முகாம் தற்போது இலங்கையில் நடத்தப்படுகின்றது.

சவூதி மன்னரும், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமாகிய முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் ஆகியோரது பணிப்புரைகளுக்கு அமையவே இந்த மனிதாபிமான முயற்சி இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.