மட்டு. வைத்தியசாலைக்கு ஆஞ்சியோகிராம் இயந்திரம்: பிரதமரின் உத்தரவை அடுத்து சுகாதார அமைச்சர் நடவடிக்கை

மட்டு. வைத்தியசாலைக்கு ஆஞ்சியோகிராம் இயந்திரம்: பிரதமரின் உத்தரவை அடுத்து சுகாதார அமைச்சர் நடவடிக்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விரைவில் ஆஞ்சியோகிராம் இயந்திரம் வழங்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்மந்தனினால் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் இன்று (06) புதன்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினை பாராளுமன்றத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு வைத்தியசாலையிலும் இந்த உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம். இப்பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச் சொல் வீரர்களல்ல' என்றார்.