சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான ஒன்றியம் உதயம்

சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான ஒன்றியம் உதயம்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை உலகில் எங்கும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. எனினும், அவர்களுடைய தொழில்பாதுகாப்பு, உரிமை மற்றும் ஏனைய சலுகைகள் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன.

குறிப்பாக சுயாதீன ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவோ அல்லது அவர்களுக்காக குரல்கொடுக்கவோ உரிய அமைப்புகள் இல்லாமை பெரும் குறைபாடாக காணப்படுகின்றது.

இவற்றை நிவர்த்திப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு, உலக ஊடக சுதந்திர தினமான இன்று (03.05.2020) இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கூட்டம் நேற்று (02) சனிக்கிழமை மாலை இணையம் வழியாக நடத்தப்பட்டு அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது. அதன் பிரகாரம் ஒன்றியத்தை ஆரம்பித்த ஊடகவியலாளர் கலாவர்ஷ்னி கனகரட்ணம் அதன் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் செயலாளராகவும் சுயாதீன ஊடகவியலாளரும் பொதுசன தொடர்பு ஆலோசகருமான சாரா பத்திரண பொருளாளராகவும்  ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக தேசிய ஒருங்கிணைப்பாளராக விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி தெரிவுசெய்யப்பட்டார். கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சுயாதீன ஊடகவியலாளர் கௌரி பிருந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்தோடு, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஊடகவியலாளர் ஏ.டபிள்யூ.ஆஷிக், அம்பாறை மாவட்டத்திற்கு ஊடகவியலாளர் ரிஷாட் ஏ காதர், மட்டக்களப்பிற்கு ஊடகவியலாளர் ஆதிப் அஹமட், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஊடகவியலாளர் தர்மினி பத்மநாதன், புத்தளம் மாவட்டத்தில் ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹமதுல்லா  மலையக ஒருங்கிணைப்பாளராக ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாந்த் வவுனியா மாவட்டத்திற்கு ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஸன், குருநாகல் மாவட்டத்திற்கு ஊடகவியலாளர் அஹ்ஸன் அப்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் நியமிக்கப்பட்டனர்.

ஒன்றியத்தின் ஆலோசகர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான டன்ஸ்டன் மணி, பெருமாள் சுஜிதரன் மற்றும் வைத்தியரும் சுயாதீன ஊடகவியலாளருமான அனுஷ்யந்தன் சிவப்பிரகாசம் ஆகியோர் செயற்படுவார்கள்.

சுயாதீன ஊடகவியலாளர்களின் தொழில் மேம்பாடு, உரிமைகள், துறைசார் பயிற்சிகள் போன்றவற்றை பிரதானமாகக் கொண்டு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.