கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 81ஆவது தேசிய தினம்

கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 81ஆவது தேசிய தினம்

இலங்கை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து முற்போக்கு நோக்கம் கொண்ட, ஜனநாயக மற்றும் நலன்புரி நாடாக பாகிஸ்தானை மாற்றல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் 81ஆவது தேசிய தினத்தை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் கொண்டாடியது.

1940ஆம் ஆண்டில், லாகூரில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுத் தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 23ஆம் திகதி, பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

இவ்வரலாற்றுத் தீர்மானமானது துணைக் கண்டத்தின் முஸ்லிம்களுக்கு ஒரு தனி தாயகத்தை வேண்டி நின்றது. இறுதியாக  14, ஆகஸ்ட் 1947ஆம் திகதி பாகிஸ்தான் என்ற நாடு உருப்பெற்றது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக் இன்று காலை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற விழாவில் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கும் தருணத்தில் பாகிஸ்தானிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிறப்பு செய்திகள் இங்கு வாசிக்கப்பட்டன. இச்சிறப்பு செய்தியில், இரு தலைவர்களும் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தையும், காயித்-இ-அஸாம் முஹம்மது அலி ஜின்னா, டாக்டர் அல்லாமா முஹம்மது இக்பால் மற்றும் பிற தலைவர்களுக்கு தமது அஞ்சலியையும்  தெரிவித்திருந்தனர்.

இறுதியாக, பாகிஸ்தானின் தேசிய தினத்தை நினைவுகூரும் வகையில்,  உயர் ஸ்தானிகரால் கேக் ஒன்றும்  வெட்டப்பட்டது. இவ்விழாவில் இலங்கை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், பல்வேறு தரப்பினர் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.