மலையக ஊடகவியலாளர் கிரிஷாந்தனுக்கு கொரோனா என வெளியான செய்தி பொய்

மலையக ஊடகவியலாளர் கிரிஷாந்தனுக்கு கொரோனா என வெளியான செய்தி பொய்

மலையகத்தினை தளமாகக் கொண்டு செயற்படும் இளம் பிராந்திய ஊடகவியலாளர்  கி.கிரிஷாந்தனுக்கு கொரோனா தொற்று என வெளியாகிய செய்தி பொய்யானது என நீரூபிக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று என கடந்த ஜுன் 3ஆம் திகதி ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

மலையகத்தினை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளரொருவரினால் எழுதப்பட்டிருந்த இந்த செய்தி, சிங்கள ஊடகங்களிலேயே முதலில் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

எனினும், மலையக ஊடகவியலாளர்  கி.கிரிஷாந்தனுக்கு கொரோனா தொற்றில்லை எனும் விடயம் பி.சி.ஆர் பிரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரின் மாதிரிகள், கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையின் ஊடாக அவருக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்படுள்ளது.

இந்த தகவலினை டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சுதர்ஷனும் உறுதிப்படுத்தினார். இவருக்கு ஏற்பட்ட இருமல் காரணமாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது, சுகாதார முன்னெற்பாடாக பி.சி.ஆர் பரிசோதனையொன்று இவருக்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, அமரர் தொண்டமானின் இறுதி கிரியையில் செய்தி சேகரிப்பு பணியில் இவர் கலந்துகொண்டமையினால் இருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற பொய்ச் செய்தி பரவியது.

எனினும் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இவருக்கு கொரோனா தொற்றில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர் கிரிஷாந்தன் விடியல் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

"தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை. தற்போதும் கூட செய்திப் பணிக்காக வெளியில் சென்று வருகின்றேன்.

எனது ஊடகப் பணி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்ச் செய்தியே இதுவாகும்" என்றார்.