முகுது மகா விகாரை: பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ

முகுது மகா விகாரை: பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ

நாட்டில் சுற்றுலா துறைக்கு பிரபல்யமான நகரங்களில் பொத்துவிலும் ஒன்றாகும். உலகிலேயே நீர்ச் சறுக்கல் விளையாட்டுக்குப் பிரசித்தமான ஆங்கிலத்தில் அருகம்பே  என்றழைக்கப்படும் அருகம் குடா இந்த பிரதேசத்திலேயே உள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும்.

இது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தெற்கு எல்லை புறத்தில் அமைந்துள்ள நகராகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பொத்துவிலின்  நகரின் வடக்கே திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கேயும் மேற்கேயும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவும் அமைந்துள்ளன.

கோமாரி, மணற்சேனை, விக்டர் தோட்டம், ஹிதாயா புரம், ஊறணி, உல்லை ஆகிய முக்கிய கிராமங்களைக் கொண்ட இப்பிரதேச மக்களின் பிரதான பொருளாதார மார்க்கமாக காணப்படுவது, விவசாயமாகும். இதற்கு மேலதிகமாக விலங்கு வேளாண்மை, கரையோர மற்றும் உள்ளக மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியனவும் பொருளாதார மார்க்கமாக காணப்படுகின்றன. சுற்றுலா துறைக்கு பிரபல்யம் பெற்ற மண் மலையும் இப்பிரதேசத்திலேயே அமைந்துள்ளமை குறிப்பிடக்கத்தது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த நகரத்தினை சிங்கள மயமாக்கும் முயற்சி கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் ஆகிய மூவினத்தவர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அங்கு வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதலொன்றை தூண்டுவதற்கான முயற்சி அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலினை அடுத்து இந்த செயற்பாடு சற்று வீரியமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு பயன்படுத்தப்படுவது பொத்துவில் மண் மலையின் உச்சியிலுள்ள முகுது மஹா விகாரையாகும்.

முஸ்லிம் இருப்பியல் அடையாளமாகத் திகழும் பொத்துவில் கொடிமரத்து பள்ளிவாசலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே இந்த விகாரை அமையப் பெற்றுள்ளது. பௌத்தர்களின் பிரசித்தி பெற்ற பௌத்த விகாரைகளில் இந்த முகுது மஹா விகாரையும் ஒன்றாகும். அருகம்பே பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் பௌத்தர்கள் இந்த விகாரையினையும் தரிசிப்பர்.

1950ஆம் ஆண்டுகளில் சிறிய ஒரு விகாரையாக தொல்பொருள் திணைக்களத்தின் கீழிருந்த இந்த பிரதேசம், அக்காலப் பகுதியில் முஸ்லிம்களினாலேயே பராமரிக்கப்பட்டு வந்தது என பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக நீண்ட காலமாக செயற்பட்டு வரும் எம்.எஸ். அப்துல் வாசீத் தெரிவித்தார்.

எனினும் பிற்பட்ட காலங்களில் இந்த விகாரையில் கடமையாற்ற வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்த சில பௌத்த தேரர்களினால் இந்த பிரதேச முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த விகாரையினை சுற்றியுள்ள 72 ஏக்கர் நிலப்பரப்பு விகாரைக்கு சொந்தமானது என முகுது மகா விகாரையின் விகாராதிபதி உடமலத்தே ரதனபிரிய ஹிமி தொடர்;ந்து வலியுறுத்தி வருகின்றார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலும் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

குறித்த தேரர் கூறுவது உண்மை என்றால் பொத்துவில் நகரமும் இந்த விகாரைக்கு சொந்தமானதாகவே அமையும் என தவிசாளர் அப்துல் வாசீத் கூறினார். இந்த பிரதேசமும், அங்குள்ள முஸ்லிம் வாழ்விடங்களும் குறிப்பாக கடற்கரைப் பகுதியும் அடிக்கடி பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற விடயம் யாவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த முகுது மஹா விகாரையின் எல்லைக்கான காணி வரைபட ரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அது தேவைக்கேற்ப அடிக்கடி விஸ்தரிக்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியதுடன் முஸ்லிம்களின் புராதன அடையாளங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டதன் விளைவாக இந்த பிரதேசம் பல்வேறு பிரச்சினைகளை தற்போது எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த பிரதேசத்தின் மூன்று ஏக்கர் காணி குறித்த விகாரைக்கும், 30 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்திற்கும் மண் மலையினைச் சுற்றியுள்ள ஒன்பது ஏக்கர் காணி கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தற்போது மன்னார் முதல் புத்தளம் மற்றம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசத்தில் வீசப்படும் கடும் காற்றின் காரணமாக பொத்துவில் கடற்கரையிலுள்ள மண், மக்கள் குடியிறுப்புக்களை நோக்கி வீசப்படுகின்றன.

"இதனால் சுமார்  8 – 10 அடி வரை மண்;, மலை போன்று காணப்படுவதாக" குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த 61 வயதான முஹைதீன் பிச்சை சுல்தான் தெரிவித்தார்.  இதனால் தனது சிற்றுச்சாலை முற்றாக அழிந்துள்ளதாகவும் தற்போது தான் ஜீவனோபாயத்திற்காக போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மண்ணை அகற்றவதற்கான நடவடிக்கையினை அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு மக்களின் கோரிக்கையினை அடுத்து கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த மண்ணை அகற்றும் நடவடிக்கையினை கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி பிரதேச சபை முன்னெடுத்திருந்தது.

எனினும் இந்த விடயத்திற்கு பொத்துவில் முகுது மகா விகாரையின் விகாராதிபதி உடமலத்தே ரதனபிரிய ஹிமியினால் மேற்கொள்ளப்பட்ட பலத்த எதிரிப்பினை அடுத்து அது கைவிடப்பட்டது.

இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் தேரருடன் கலந்துரையாடிய போது அது பயனளிக்கவில்லை என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த மண்களை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதாக விகாராதிபதி குற்றஞ்சாட்டினார். இந்த சர்ச்சை ஏற்பட்ட அதே காலப் பகுதியில் குறித்த விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் செய்தியொன்று பரப்பட்டது.

இது தொடர்பில் பிரபல சிங்கள பாடகரான இராஜும் குறித்த விகாரைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு வீடியோ ஒன்றினை சமூக ஊடகளில் வெளியிட்டார். முஸ்லிம்களை இலக்கு வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த வீடியோவில் குறித்த விகாராதிபதியின் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வீடியோக்களினை வெளியிட்டுள்ள பாடகர் இராஜின் இந்த விஜயத்தின் போது விமல் வீரவசன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மா உதயசாந்தவும் இணைந்திருந்தார்.

ஏற்கனவே அம்பாறை மாவட்ட மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்ற நிலையில் வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர் இராஜுடன் இந்த விகாரைக்கு விஜயம் செய்துள்ளமை குறித்த பிரதேச மக்கள் மத்தியில் பாரிய சந்தேகமொன்றை தோற்றுவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அதுரலிய ரத்ன தேரரும் பொத்துவிலுக்கு விஜயம் செய்து குறித்த விகாராதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன் கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பத்மா உதயசாந்த, பாடகர் இராஜ் மற்றும் முகுது மலை விகாராதிபதி ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த விவகாரம் தொடர்பில் ராஜகிரியவில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த விகாரை தொடர்பான விடயத்தினை இனவதா அப்படையில் பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஏற்பட்டாளர்கள், இந்த மாநாட்டில் குறித்த பிரதேச முஸ்லிம்களை கடுமையாக விமர்ச்சித்தனர்.  

இவ்வாறான நிலையில் மண் அகழ்விற்காக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்த உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அதன் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.ஜெஸார் தெரிவித்தார்.

"குறித்த அனுமதி ஐந்து நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட சர்ச்சைகளினால் குறித்த மண் அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை. இந்த நிலையிலேயே மண் அகழ்விற்கான தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் குறித்த பிரதேச மக்களின் நலன் கருதி பேச்சுவார்த்தையின் ஊடாக இதற்கு தீர்வுகாண முயற்சிப்பதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் காற்றினால் குடியிறுப்பு பிரதேசங்களிற்கு மண் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்காக குறித்த பிரதேசத்தில் அடம்பன் கொடி நடுவதற்கு எமது திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றினை பெற்றுத் தருமாறு அப்பிரதேச வாசியான 39 வயதான அப்துல் மஜீத் தெரிவித்தார். இந்த பிரச்சினையினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீதியொன்று முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் ஜனாஸாவினைக் கூட மிக நீண்ட தூரம் சுற்றிகொண்டு செல்ல வேண்டியுள்ளது. மீனவத் தொழிலாளி ஒருவர், மலைபோன்றுள்ள இந்த மண் கும்பலிற்கு மேலால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் துவிச்சக்கர வண்டியினை ஏற்றிக்கொண்டு தொழிலுக்கு செல்வதாகவும் கூறினார்.

இதேவேளை, குறித்த மண் அகழ்விற்கு எதிராக செயற்படும் பொத்துவில் முகுது மகா விகாரையின் விகாராதிபதி உடமலத்தே ரதனபிரிய ஹிமியிற்கு எதிராக பொத்துவில் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசீத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபையின் மாதாந்த அமர்வின் போது ஏகமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

"குறித்த பிரதேசத்தில் இதற்கு முன்னரும் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட பல செயற்த்திட்டங்களுக்கு குறித்த விகாரதிபதியினால் பல தடவைகள் இடையூறுகள் விளைக்கப்பட்டன. அப்போதும் நீதிமன்றத்தினை நாடியே நாம் தீர்வு பெற்றுள்ளோம் அது போன்று இதற்கான தீர்வினை பெறுவோம்" என்றார் அவர்.

பிரதேச சபைக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக குறித்த தேரரினால் ஏற்கனவே பல தடவைகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும் குறிப்பிட்ட அனைத்து மனுக்களும் நீதவானினால் நிராகரிக்கப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் ஊடாக பிரதேச சபைக்குள்ள அதிகாரங்களினை நீதிமன்றித்தின் ஊடாக தடை செய்ய முடியாது என இதன்போது நீதவான் அறிவித்ததாகவும் தவிசாளர் குறிப்பிட்டார்.

முகுது மலை புத்தர் சிலையை இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதென வெளியான செய்திகளில் எந்தவொரு உண்மையுமில்லை என தெரிவித்து கடந்த புதன்கிழமை வீடியோன்று சமூக ஊடகங்களில் வெளியாகியது.

இந்த விகாரையில் கடமையாற்றும் தேரர் எனக் அறிமுகப்படுத்தும் ஒரு தேரர் குறித்த வீடியோவில் தோன்றி முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார். இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்படுகள் இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த செயற்பாடு குறித்த பிரதேசத்தில் அசாதாரன நிலையொன்றினை தோற்றுவிப்பதற்கான முயற்சியாக கருதப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் உள்ள போதும் இதுவரை அவர்களில் ஒருவராவது இந்த விடயம் தொடர்பில் வாய் திறந்தாக எந்தவொரு ஊடத்திலும் அவதானிக்க முடியவில்லை.

பௌத்த மக்கள் மத்தியில் பரப்பபடும் இந்த பொய் பிரசாரத்திற்கு எதிராக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தார்மீக பொறுப்பு இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலத்தில் மாத்திரம் பொத்துவில் மக்களின் வாக்குகளை நாடிச் செல்லாது ஏனைய காலங்களிலும் அப்பிரதேச மக்களுக்காக குரல்கொடுக்க வேண்டியது அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளின் தார்மீக பொறுப்பாகும்.

அது போன்று அதிக முஸ்லிம் பிராந்திய ஊடவியலாளர்களைக் கொண்டுள்ள மாவட்டமாக அம்பாறை உள்ளது. இந்த மாவட்ட ஊடகவியலாளர்கள் தங்கள் மாவட்டத்தின் எல்லை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்து பொய்ப் பிரச்சாரத்தினை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-றிப்தி அலி-