சுதேச மருத்துவத்தை பாதுகாக்க நிகழ்ச்சித் திட்டம்: ஜனாதிபதி

சுதேச மருத்துவத்தை பாதுகாக்க நிகழ்ச்சித் திட்டம்: ஜனாதிபதி

பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த மருத்துவ முறையை பிரபல்யப்படுத்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கண்டி மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இன்று (12) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணமொன்றை ஜனாதிபதி மேற்கொண்டார்.

இதன்போது, தெல்தெனிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதியிட் சுதேச மருத்துவர் ஒருவர் மகஜரொன்றை  கையளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, சுயதொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக கிராமிய கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை அரச வங்கிகளுடன் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குண்டசாலையில் மெனிக்ஹின்ன பிட்டவலையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பாத்துதும்பர யட்டிவாரன விகாரைக்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி, வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் 2020 தேர்தல் கருப்பொருள் பாடல் ஜனாதிபதி அவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும்போது 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஏற்படும் தடைகளை விளக்கிய ஜனாதிபதி, அதனை சரி செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான பாராளுமன்றத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஹரிஸ்பத்துவ அலவத்துவல பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

குணதிலக்க ராஜபக்ஷ ஹரிஸ்பத்துவை மெதவெலவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றியதுடன், பாதையில் இரு புறத்திலும் நின்றுகொண்டிருந்த மக்கள் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல கலகெதரே ஹத்தரலியத்த சந்தை வளாகத்திலும் எல்.பிரசன்ன வீரவர்தன ஹரிஸ்பத்துவை நுகவெல 05ஆம் கட்டையிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.