றிசாத் பதியுதீனுடன் எந்த அரசியல் ஒப்பந்தமுமில்லை: ஜனாதிபதி

றிசாத் பதியுதீனுடன் எந்த அரசியல் ஒப்பந்தமுமில்லை: ஜனாதிபதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனுடன் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் றிசாத் பதியுதீனின் சகோதரரான றியாஜ் பதியுதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது எனது அரசாங்கத்தின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பாகும். கடந்த காலங்களில் நடந்ததைப் போல, மக்களை கைது செய்யும் அல்லது விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம்  ஒப்படைக்க நான் தயாராக இல்லை.

அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் விடும் குறைபாடுகள் அல்லது தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் எங்கள் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்மீது நம் நாட்டு மக்கள் இதுவரை  வைத்திருந்த நம்பிக்கையை வீணாகாமல்  என்றும்இ அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.