நாட்டின் இறைமையைப் பாதுகாக்க தம்முயிரைத் தியாகம் செய்த ஷுஹதாக்கள்

நாட்டின் இறைமையைப் பாதுகாக்க  தம்முயிரைத் தியாகம் செய்த ஷுஹதாக்கள்

03.08.1990இல் காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாயல்களில் 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் 29 வருடங்கள்

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தற்கொலைக்குண்டுத்  தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் மீதும் சிலரினால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பல்வேறு விமர்சனங்களை அடுக்கடு;க்காக முன் வைத்து வரும் நிலையில் இலங்கை முஸ்லிம் சமூக இழப்புக்களின் அடையாளச் சின்னமான ஷுஹதாக்கள் தினம் 03.08.2019 சனிக்கிழமை 29வருடமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

வடக்கையும் கிழக்கையும் தனிநாடாக தமிழீழமாக பிரகடணப்படுத்தி பிரிவினைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாத்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம்களாகும்.

03.08.1990 அன்று காத்தான்குடிப் பள்ளிவாயல்களில் இடம் பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 103 முஸ்லிம்களாகும்.

அன்று தமிழீழத்துக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்கியிருந்தால் இந்த நாடு பிரிவினையை சந்தித்திருக்கும். நாடு துண்டாப்பட்டு நாட்டின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும்.

இதற்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வில்லை. நாட்டின் தேசியத்தோடு நின்று இறைமையைப் பாதுகாக்க பாடுபட்ட போதுதான் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு விடுதலைப்புலிகளினால் மேற் கொள்ளப்பட்டது.

1990ம் ஆண்டு  இலங்கையில் மிக மோசமான காலப்பகுதியாகும். யுத்த மேகங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சூழ்ந்திருந்த மரண அச்சமும் பீதியும் நிறைந்து காணப்பட்ட ஒரு காலப்பகுதியாக 1990ம் ஆண்டு காலப்பகுதியை நாம் பார்க்கலாம்.

பல தசாப்தங்களாக இருந்து வந்து தேசிய நல்லிணக்கம் இன நல்லுறவு சமூக ஒற்றுமை அனைத்தும் சீர்குலைந்து இன முறண்பாடு உக்கிரமாக இருந்த கால கட்டமாக இந்தக் காலப்பகுதியை கூறமுடியும்.

இந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பை மிக மோசமாக மேற்கொண்டிருந்தனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை பல வந்தமாக வெளியேற்றியமை கிழக்கில் பல முஸ்லிம் கிராமங்களில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்;றிமை அச்சத்தினாலும் மரணப் பயத்தினாலும் தமது சொந்த நிலங்களை விட்டு முஸ்லிம்கள் வெளியேறியமை கடத்தல்களும் கொலைகளும் என இவ்வாறு பல அசாதரண சம்பவங்;கள் இடம் பெற்றன.

இந்தக் காலப்பகுதியில்தான் உலகில் இடம் பெற்ற மிகமோசமான படு கொலைகளில் ஒன்றாக கருதப்படும் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையும் இடம்பெற்றது. காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை இடம் பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாள் புனித ஹஜ்கடமையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்தான்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட காத்தான்குடி ஹாஜிமார்களும் அவர்களோடு வந்த உறவினர்களும் இன்னும் சில பொது மக்களும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள் சிறுவர்கள் குழந்தைகள் என பலரும் அடங்குகின்றனர். இந்த கடத்தல் சம்பவம் இன நல்லிணக்கத்திற்கு மோசமான ஒரு விளைவை ஏற்படுத்தியிருந்த நிலையில் மற்றொரு மிக மோசமான மிலேச்சத்தனமான கொலைச் சம்பவமாக பள்ளிவாயல் படு கொலைச் சம்பவம் இடம் பெற்றது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 124 முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்டனர்.

பள்ளிவாயலுக்குள்ளேயே 103 பேரும் பின்னர் 21 பேருமாக 124 பேர் இதில் படுகொலை செய்யப்பட்டனர். 03.08.1990 அன்றிரவு இவ்விரண்டு பள்ளிவாயல்களிலும் புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகள் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் துப்பாக்கிச் சூடுகளினால் 103 முஸ்லிம்கள் ஸ்தளத்திலேயே கொல்லப்பட்டனர்.

அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூச் செய்து கொண்டு தொழுகை;காக இமாமின் பின்னாள் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து குண்டுத்தாக்குதலையும் நடாத்தினர்.

இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. விடுதலைப்புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுமன் குற்றுயிராய்க்காணப்பட்டு பின்னர் மரணித்தவர்களும் இதில் அடங்குகின்றார்கள்.

இப்பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாக செல்லுங்கள் என பள்ளிக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக பலர் இன்றும் தெரிவிக்கின்றனர். பள்ளிவாயல் எங்கும் இரத்த ஆறு மரண ஓலங்கள். தந்தை மகன் ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று சகோதரர்கள் மச்சான் மச்சினன் இவ்வாறு உறவுமுறையான பலரும் இதில் உயிரிழந்ததுடன் இன்னும் சிலர் படு காயமடைந்தனர்.

இந்த தாக்;குதலை மேற் கொண்ட புலிகள் தப்பித்து சென்றதையடுத்து குடும்ப உறவினர்கள் பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இவ்விரண்டு பள்ளிவாயலையும் நோக்கி சென்று உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்கள் அனைவரையுமே காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு கொண்டு சென்று அங்கிருந்து காயமடைந்வர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் மட்டக்களப்பிலிருந்து இலங்கை  விமானப் படையினரின் விமானத்தின் மூலம் அம்பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் வைத்தியசாலைகளிலும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் குடும்பத் தலைவன் உயிரிழந்ததால் அக்குடும்பமே தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டனர். இளம் வயதில் விதைவகளான பல பெண்கள் தந்தையை இளந்த பிள்ளைகள் என இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோக வரலாறுகள் இருக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் படு காயமடைந்து பல மாதங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ஊணமுற்று வாழும் பலர் இன்றும் இதன் சாட்சிகளாக இருக்கின்றனர். இன்னும் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் வாழும் சிலரும் இருக்கின்றனர்.

இச் சம்பவத்தில் ஊன முற்று வாழும் ஒரு சகோதரர் கருத்து தெரிவிக்கையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி எனது தாயை பார்ப்பதற்காக நான் தாயின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப் போது எனக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது.

58 நாட்களில் குழந்தையும் எனக்கிருந்தது. அப்போது பள்ளிவாயலில் தொழுக்காக அதான் சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகிய போது எனது தாய் தொழுகை ஆரம்பமாகிவிட்டது அவசரமாக பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள் என அனுப்பினாள்.

அப்போது நான் மீரா ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு வந்தேன். பள்ளிவாயலின் முன் வளவில் எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்டிருந்தார். நானும் அவரும் அவ்விடத்தில் பேசிக் கொண்டு நின்ற போது அந்த வீதியினால் ஆயுதம் தரித்த சிலர் வரிசையாக வருவதை கண்டேன். அச்சம் அடைந்த நாங்கள் அவசரமாக வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு சென்று தொழுகையில் இணைந்து சுஜுது செய்யும் போது பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

தொழுகையில் இருந்த பலர் சரிந்து விழுவதைக் கண்டேன் நானும் காயங்களுடன் விழுந்து விட்டேன் எனது வயிற்றுப் பகுதியில் சிறுவன் ஒருவனும் விழுந்து கிடந்ததை கண்டேன். சில நிமிடங்களின் பின்னர் நான் உட்பட காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு பல மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று இன்று ஒரு ஊணமுற்றவராக வாழ்ந்து வருகின்றேன்.

இந்த பள்ளிவாயல் சம்பவத்திற்கு முன்னர் சுயமாக தொழிலில் ஈடுபட்டு தொழிலில் முன்னேற்றமாக காணப்பட்ட நான் இன்று ஒரு ஊணமுற்றவனாக பாரிய தொழில் எதுவும் செய்யமுடியாதவனாக இருக்கின்றேன் என்கிறார். இவ்வாறு பலர் இந்த நிலையில் இன்றும் காணப்படுகின்றனர்.

இந்த வகையில் காத்தான்குடி பள்ளிவாயல் படு கொலை என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும். இந்த இரண்டு பள்ளிவாயல்களிலும் இன்றும் இதன் அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. ஆன்டு தோறும் ஆகஸ்ட் 3ம் திகதி ஷூஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு ஏறாவூர் உட்பட வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீதான மிக மோசமான இனச் சுத்திகரிப்பு படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஷுஹதாக்கள் தினத்தின் போது காத்தான்குடி பள்ளிவாயல் படு கொலை மற்றும் ஏறாவூர் படுகொலைச் சம்பவம் உட்பட இவ்வாறு முஸ்லிம்கள் மீதான படுகொலைகளின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்த தினத்தை தேசிய ஷுஹதாக்கள் தினமாக ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் பிரகடனம் செய்திருந்தது.

கடந்த கால யுத்தம் இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளன. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்த பள்ளிவாயல்களில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவமும் ஒரு மிகப் பெரிய சான்றாகும்.

இந்த வரலாறுகளை மறந்து விடமுடியாது. முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக இரத்தம் சிந்தி இந்த நாட்டின் இறைமையை பாதுகாத்து பிரிவினையை தடுத்துள்ளார்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாத்த மாவீரர்கள் என்றும் கூறமுடியும்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டுவதற்கு சில சக்திகள் முயன்று வரும் இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் அவசியமாக நினைவு கூறப்படவேண்டியவையாகும்.

முஸ்லிம்கள் ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தது கிடையாது. மாறாக நாடு பிளவுபடுவதற்கு ஆதரவளிக்க வில்லை என்பதற்காக பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிம்களேயாவர் என்பதற்கு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளே இன்றும் அத்தாட்சியாக விளங்குகின்றன.

-எம்.எஸ். எம். நூர்தீன்-