முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் 30 மில்லயின் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் 30 மில்லயின் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவசியமான சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரண தொகுதி “முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) நிறுவனத்தினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (02) வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படக்கூடிய 3 வென்டிலேடர்கள் (Ventilators), 4 ஒக்சிஜன் கருவிகள் (Oxygen Therapy), 3000 பீ.பீ.ஈ (PPE). தொகுதிகள் உள்ளிட்ட மருத்துவ உபரகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய அமெரிக்காவின் அமெரிகெயார்ஸ் (Americares-USA) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் தலைமையகம் (Muslim Aid’s Head Quarters-UK) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

1985ஆம் ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் தலைமையகம் இதுவரை சுமார் 20 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் இணைந்து நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சுனாமி பேரழிவை தொடர்ந்து 2005ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் பைசர் கான் உள்ளிட்ட முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.