சாய்ந்தமருதில் தூர்நாற்றம்: பிராந்திய ஊடகவியலாளர் உட்பட 8 பேருக்கு அழைப்பாணை

சாய்ந்தமருதில் தூர்நாற்றம்: பிராந்திய ஊடகவியலாளர் உட்பட 8 பேருக்கு அழைப்பாணை

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடர்ச்சியாக வீசப்படுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் உட்பட எட்டுப் பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (23) திங்கட்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த தூர்நாற்றம் தொடர்பில் தீர்க்கமான காரணங்களை இதுவரை கண்டறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ், கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி முஹம்மத் அஸ்மி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி அர்சத் காரியப்பர், கல்முனை மாநகர விலங்கு வைத்தியர் வெட்டபொல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் குறித்த விடயம் தொடர்பில் சில செய்திகளை எழுதிய தமிழன் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர் நூருல் ஹுதா ஆகியோருக்கே இந்த அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சுகாதார குழுவின் தவிசாளர் மாநகர சபை உறுப்பினர் ரோஷன் அக்தாரினால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு இன்று கல்முனை நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மேற்படி ஒன்பது பேரையும் எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.ரஸாக், சட்டத்தரணிகளான சுவாஷ் பிர்தௌஸ் மற்றும் ஜாவீட் ஜெமீல் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.