யாழ். – சென்னை நேரடி விமான சேவை திங்கள் ஆரம்பம்

யாழ். – சென்னை நேரடி விமான சேவை திங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் சென்னை விமான நிலையத்திற்கும் இடையிலான நேரடி சர்வதேச விமான சேவை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏயார் இந்தியா விமான நிறுவனத்தின் இணை நிறுவனமான ஏலையன்ஸ் ஏயர் அறிவித்தது.

இது தொடர்பில் ஏலையன்ஸ் ஏயர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான விமான சேவை வாரத்திற்கு மூன்று தடவை என்ற அடிப்படையில் திங்கள், புதன் மற்றும் சனி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

குறித்த விமானம் இலங்கை நேரப்படி மு.ப 10.35 மணிக்கு சென்னையிலிருந் புறப்பட்டு இலங்கை நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தினை வந்தடையும்.

அதேபோன்று இலங்கை நேரப்படி பி.ப 12.45 மணிக்கு யாழிலிருந்து புறப்பட்டு இலங்கை நேரப்படி பி.ப 02.10 மணிக்கு சென்னையை சென்றடையும். ஏலையன்ஸ் ஏயர் நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு 53 இடங்களுக்கான விமான சேவையினை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கான இதன் சேவை முதலாவது சர்வதேச விமான சேவை என்பதும் 41 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமான சேவையின் ஊடாக யாழிலிருந்து சென்னை பயணிப்பாவர்கள் - திருச்சி, மதுரை, டெல்லி, திருவானந்தபுரம், கோவா, ஹைதராபத், குவைத், மஸ்கட், சார்ஜா மற்றும் டுபாய் உள்ளிட்ட பல விமான நிலையங்களுக்கான இணைப்பு விமானத்தினையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.