95% அரச காணிகள் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது: பொத்துவில் பிரதேச செயலகம்

95% அரச காணிகள் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது: பொத்துவில் பிரதேச செயலகம்

பொத்துவில் பிரதேச செயலக எல்லைக்குள் காணப்படுகின்ற அரச காணிகளில் 95 சதவீதமானவை பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது என பொத்துவில் பிரதேச செயலகம் தெரிவித்தது.

இப்பிரதேச செயலக எல்லைக்குள் அண்ணளவாக 8,050 ஹெட்டயேர் அரச காணிகள் காணப்படுவதாகவும், இதில் அண்ணளவாக 7,712 ஹெட்டயேர் மக்கள் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரும், தகவல் அதிகாரியுமான எம்.ஐ. பிர்னாஸ் தெரிவித்தார்.

இதில், அரச நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விபரம் நில அளவைத் திணைக்களத்தினால் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொத்துவில் பிரதேச செயலகத்தின் கீழ் 18 கட்டிடங்கள் காணப்படுகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக  உதவிப் பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.

விடியல் இணையத்தளம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்கன் கோனர் ஆகியன இணைந்து நடத்திய தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்ட ஏ.சீ.எம். அத்னானினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலினை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது.