மைத்ரி, ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு

மைத்ரி, ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

இதற்கு மேலதிகமாக நல்லாட்சி அரசாங்கத்தின் சிரேஸ்ட அரசியல்வாதியொருவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவும்  குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினாலேயே இந்த சிபாரிசு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்கூட்டி வழங்கப்பட்ட எச்சரிக்கையினை செயற்படுத்த தவறியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சுமார் 270க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த சுதந்திர தின விழாவில் நிகழ்த்திய உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பில் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு 214 நாட்கள் கூடி 640 அமர்வுகளில் 451 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

-சன்டே டைம்ஸ்-