மொரட்டுவை மேயருக்கு விளக்கமறியல்

மொரட்டுவை மேயருக்கு விளக்கமறியல்

கல்கிசை பொலிஸாரினால் இன்று (28) வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மொரட்டு​வையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகளின் போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மொரட்டுவை மேயர் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதன்போது, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை மற்றும் அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.