வாழைச்சேனை வைத்தியசாலையின் பிறப்பு, இறப்பு பதிவு: வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் மேற்கொள்வதை நிறுத்துமாறு உத்தரவு

வாழைச்சேனை வைத்தியசாலையின் பிறப்பு, இறப்பு பதிவு: வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் மேற்கொள்வதை நிறுத்துமாறு உத்தரவு

வாழைச்சேனை வைத்தியசாலையின் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகளை கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் மேற்கொள்வதை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பதிவாளர் நாயகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு கடந்த ஜுன் 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை வைத்தியசாலையின் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகள் கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி முதல் பதிவாளர் நாயகத்தின் அனுமதியுடன் குறித்த வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகளை கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டன.

இதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் பதிவாளர் நாயகத்திடம் முறைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்தே குறித்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும் எனவும் பதிவாளர் நாயகம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.