ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் இஷாக் எம்.பி

ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் இஷாக் எம்.பி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், இன்று (07) அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்துகொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இஷாக் றஹ்மான் மாத்திரமே இன்றை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட விளக்கமளித்தார்.