பஸிலிற்காக எம்.பி பதவியினை துறந்த ஜயந்த கெட்டகொட

பஸிலிற்காக எம்.பி பதவியினை துறந்த ஜயந்த கெட்டகொட

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஜயந்த கெட்டகொட இராஜினாமச் செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு இன்று (06) எழுத்துமூலம் அறிவித்தார்.

அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட அவர்கள் 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

அதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அவர் இராஜினாமா செய்யும் வரை ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசானாக பதவி வகித்ததுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழு மற்றும் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.