பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை 11ஆம் திகதி திறப்பு

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை 11ஆம் திகதி திறப்பு

சீனா அரசாங்கத்தின் நிதியுதவியில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை எதிர்வரும்  ஜுன் 11ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 11 பில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலைக்கு சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் 204 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதி, சிறுநீர நோயாளிகளின் இரத்தத்தினை சுத்திகரிக்கும் 100  டயாலிசிஸ் இயந்திரம், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகூடம் உட்பட 5 நவீன ரக சத்திரசிகிச்சைகூடங்கள், நவீன வசதிகளுடனான ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த வைத்தியசாலை கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் சுமார் 20 மாத காலப் பகுதிக்குள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.