சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்

சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்

-றிப்தி அலி-

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையினை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை 11.00 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அது மாத்திரமல்லாமல் இந்த வெப்ப காலநிலையினால் பல மாவட்டங்களில் குடிநீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையமும் அறிவித்துள்ளதுடன் நீரினை சிக்கனமாக பாவிக்குமாறும் தெரிவித்துள்ளது.

அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர் இன்று மக்களுக்கு இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இந்த நீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எதிர்வு கூறியுள்ளனர்.

வெப்ப நிலையில் அதிகரிப்பின் காரணமாகவே நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது அதிகமான வரட்சி நிலவுகின்றது. இதனால் குடிநீருக்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், களுத்துறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான களுத்துறை, பயாகலை, பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கடந்த சில வாரங்களாக விநியோகிக்கப்படும் நீர், உப்புத் தன்மையான உவர் நீராகவே காணப்படுகின்றது.

அதாவது, களுத்துறை நகரிலுள்ள களு கங்கையிலிருந்து பெறப்பட்ட நீர், சுத்திகரிப்பு செய்யப்பட்டு குறித்த மாவட்டத்தின் கரையோர பிரசேங்களில் வாழும் மக்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக களு கங்கையின் நீர் வற்றியுள்ளது. இதனால் களு கங்கையில் கடல் நீர் கலக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே உவர் நீர் கலந்த குடிநீர் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் அப்பிரதேச மக்களுக்கு தற்போது விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

"இந்தப் பிரச்சினை நேற்று, இன்று தோன்றியதல்ல. சுமார் 15 வருடங்களுக்கு  மேலாக இந்த பிரச்சினையினை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றோம்" என தர்கா நகரினைச் சேர்ந்த 40 வயதான எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார்.

"இதற்கு நிரந்த தீர்வொன்றினை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பிரதேச மக்கள் உப்புத் தன்iமையான நீரினை பயன்படுத்துவதன் காரணமாக மக்கள் மத்தியில் பல்வேறு வகையான நோய்கள் பரவுவதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, அனுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்ட மக்கள் சுத்தமான குடிநீரை நுகராமையினால் சிறுநீரகம் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சபையின் மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளரான பொறியியலாளர் எம்.டி.எம்.றாசீல் தெரிவித்தார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் களுத்துறை, வாதுவ, மதுகம, அளுத்கம, பேருவளை மற்றும் பயகாலை ஆகிய பிரதேச பொறியியலாளர் அலுவலகங்களுக்கு உட்பட மக்கள் இந்த பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினைக்கான உடனடி தீர்வாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 380 நீர் தாங்கிகள் வைக்கப்பட்டு எமது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் கூறினார்.

இந்த செயற்திட்டம் குறித்த பிரதேசங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் பவுசர்களின் ஊடாகவே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிகளுக்கான சுத்தமான குடிநீர் வழங்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இது, பிரதேச மக்களின் தேவைக்கு போதுமானதாக இன்மையினால் அவர்கள் - நன்னீர் கிணறுகளையும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்களையும் நாடிச் செல்கின்றனர். எனினும் நன்னீர் கிணறு வசதி, குறிப்பிட்ட சில வீடுகளில் மாத்திரமே உள்ளமையினால் அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் உப்புத் தன்மையான நீர் வழங்கப்படுகின்ற காலப் பகுதியில் பல கிலோ மீற்றர் தூரம் சென்று கிணற்று நீரை எடுத்து வந்து பயன்படுத்துவதாக" றியாஸ் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினை காரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக சில்லறைக் கடை உரிமையாளரான எம். நாஸீர் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரினை வாங்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தர்கா நகர், மீஹிரிப்பென்ன ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வீடொன்றிலுள்ள நன்னீர் கிணற்றின் மூலம் மக்களுக்கு தேவையான நீர், கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த கிணற்று நீரினை பெறுவதற்காக  பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேச மக்கள் வரிசையில் நின்று நீர் பெற்றதினை என்னால் அவதானிக்க முடிந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த வீட்டிலுள்ள கிணற்று நீர், மோட்டார் இயந்திரத்தின் ஊடாக நீர் தாங்கிக்கு ஏற்றப்பட்டு, டொப்பின் (குழாயினூடாக) ஊடாக இலவசமாக வழங்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இக்காலப் பகுதியில்  குறித்த வீட்டாரின் மாதந்த மின்சாரக் 200,000 – 300,000 ரூபாவாகும் என அவர்கள் குறிப்பிட்டனர். இந்த நன்னீர் கிணற்றின் ஊடாக இப்பிரதேசத்தில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்களப் பெண்மணியொருவர் குறிப்பிட்டார்.

தர்கா நகரிற்கு அண்மையிலுள்ள வரப்பிட்டிய எனும் சிங்கள கிராமத்தினைச் சேர்ந்தவர்களும், முஸ்லிமிற்கு சொந்தமான இந்த வீட்டிலிருந்து குடிநீர் பெறுதாக குறித்த பெண்மணி தெரிவித்தார்.

இந்த வீட்டிலிருந்து 24 மணி நேரமும் இலவசமாக எந்தவித பிரச்சினையுமின்றி குடிநீர் வழங்கப்படுவதாக குறித்த சிங்களப் பெண்மணி குறிப்பிட்டார். இதேவேளை, அளுத்கம கந்த விகாரைக்கு அருகில் களுவாமோதர எனும் பிரதேசத்தில் அஜித் எனும் தனிநபரினாலும் இலவசமாக குடிநீர் வழங்கப்படுதாக தர்கா நகர், ஸாஹிரா கல்லூரி வீதியினைச் சேர்ந்த சித்தி நிலுபா தெரிவித்தார்.

இங்கு தினமும் வந்து குடிநீரினை எடுத்துச் செல்வதாக தெரிவித்த அவர், இன, மத வேறுபாடுகள் எதுவுமின்றி அனைத்து மக்களுக்கும் நீர் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தனது குடும்பத்திற்கு தேவையான தினசரி குடிநீரினை இங்கிருந்து கொண்டு செல்வதாக குறித்த பெண்மணி மேலும் கூறினார். குறித்த குடிநீரை வழங்கும் தொழிலதிபர் அஜிதினை சந்தித்த போது, மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு தேவையான குடிநீரை பலப்பிட்டி பிரதேசத்திலிருந்த தினமும் பவுஸரிலிருந்து எடுத்து வந்து வழங்குவதாக குறிப்பிட்டார்.

எனினும் இதற்காக செலவழிக்கும் நிதியினை குறிப்பிட்ட அவர் மறுத்துவிட்டார். "இறைவனுக்காவே இந்த பணியினை நான் மேற்கொள்கின்றேன். இதனால் எனது இந்த பணிக்கு எந்தவித விளம்பரத்தினையும் நான் எதிர்பார்க்கவில்லை" என்றார் தொழிலதிபர் அஜித்.

இது போன்று களுத்துறை பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றில் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கியிலிருந்து அப்பிரதேச முஸ்லிம் மக்கள் குடிபெறுவதையும் அவதானிக்க முடிந்தது.

"களுத்துறை மாவட்டத்தில் இதுவரை சுமார் 73,000 நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையின் காரணமாக சுமார் 65,000 நீர் இணைப்புக்களினைப் பெற்ற சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளரான எம்.டி.எம்.றாசீல் தெரிவித்தார்.

இதற்கு தீர்வு காணும் வகையில் அளுத்கம - அகலவத்த - மத்துகம குடிநீர் திட்டம் எனும் செயற்த்திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செயற்திட்டத்தின் மூலம் களு கங்கையில் கடல் நீர் கலக்கப்படுகின்ற காலப் பகுதியில் குடா கங்கையிலிருந்து கொட்டிகேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரினைக் கொண்டு வந்து சுத்திகரித்து மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவொரு குறுகிய கால தீர்வுத் திட்டமாகும். இந்த திட்டம் இந்த வருட இறுதியில் நிறைவடையவுள்ளது. இதனை அடுத்து குடிநீர் விடயத்தில் களுத்துறை மாவட்டத்தின் கரையோர பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.

32,278 மில்லியன் ரூபா உத்தேச செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த செயற்திட்டம் கடந்த 2018 ஒக்டோபர் 22ஆம் திகதி கொட்டிகேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆரம்பித்து வகைக்கப்பட்டது.   

இந்தியாவின் எக்சிம் வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன இணைந்து இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் களுத்துறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் வாழும் மக்களின் நீண்ட கால கனவான சுத்தமான தூய குடிநீரினை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக சுமார் 32,000 புதிய நீர் இணைப்புக்களை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, "களு கங்கையில் கடல் நீர் கலப்பதனை தடுக்கும் வகையில் களுகங்கையை மறைத்து தடுப்பு அணையை நிர்மாணிப்பதே இந்த பிரச்சினைக்கான நிரந்த தீர்வாகும்" என பொறியியலாளர் றாசீல் குறிப்பிட்டார்.

"இந்த திட்டத்திற்கு பாரிய பணத் தொகை தேவைப்படும். எனினும் இந்த செயற்திட்டத்தினை மேற்கொள்வது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்துடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு அவர்களினால் மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டது" என அவர் குறிப்பிட்டார்.

"எனினும் அந்த நடவடிக்கை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதேவேளை, மாத்தறையிலுள்ள நில்வள கங்கை, காலியிலுள்ள கிங் கங்கை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள வளவ கங்கை ஆகியவற்றில் கடல் நீர் கலப்பதனை தடுக்கும் வகையில் தடுப்பு அணைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த பணி நீர்ப்பாசன திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற செயற்த்திட்டமொன்றினை களு கங்கையில் மேற்கொள்வதன் ஊடாகவே இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வினை பெற முடியும" என அவர் கூறினார்.

"எவ்வாறாயினும் இப்பிரதேசத்தில் நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் வருடமொன்றிற்கு சுமார் 2,000 புதிய நீர் இணைப்புக்கள் எமது சபையினால் வழங்கப்படுகின்றது. நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு பொதுமக்களின் கைகளிலேயே உள்ளது" என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளரான எம்.டி.எம்.றாசீல் மேலும் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட கரையோர பிரதேச மக்கள் எதிந்நோக்கும் இந்த பிரச்சினைக்கு நிரந்த அடிப்படையில் தீர்வு காணப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைககளையும் அரசாங்கம் உனடியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்பிரதேச மக்களின் நீண்ட நாள் அவாவாகும். அதுபோல் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பொன்றும் இப்பிரதேச மக்களுக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.